சாவு வீட்டில் ஒப்பாரி வைக்க ஆள் தேவை.. என்னங்க சொல்றீங்க?.. அட பதறாதீங்க.. மேட்டரே வேறயாம்!

Su.tha Arivalagan
Sep 25, 2024,10:10 AM IST

டெல்லி:   எப்படியெல்லாம் பீதியைக் கிளப்புறாங்கய்யா என்று ஒரு படத்தில் வடிவேலு சொல்வார்.. அந்த மாதிரிதான் இந்த மேட்டரைப் படிக்கும்போது.. நமக்கும் முதல்ல பதட்டமாத்தான் இருந்துச்சு.. ஆனால் மேட்டரே வேற  அப்படின்னு பிறகுதான் தெரிஞ்சது.


ஹலோ.. இன்னும் நீங்க என்னா மேட்டர்னு சொல்லவே இல்லையே.. இருங்க பாஸ் சொல்றோம்!




தடுக்கி விழுந்தால் சமூக வலைதளத்தில்தான் விழணும்.. அதுதானே இப்போதைய கலாச்சாரம், பாரம்பரியம்... அந்த வகையில் எக்ஸ் தளத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. பார்த்த வேகத்தில் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து மறுபடியும் உற்றுப் பார்த்து படித்தபோது அடப் பாவிகளா என்னங்கடா இது என்றுதான் தோன்றியது.


அது ஒரு விளம்பர கார்டு.. அதில் என்ன இருந்துச்சுன்னா...!


சாவு வீட்டில் கதறி அழ ஆள் தேவை.. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று போட்டிருந்தது.. பாத்தீங்களா இப்ப உங்களுக்கும் அதே ஜெர்க் ஆச்சுதானே.. இதை யார் படித்தாலும் இஸ்க் இஸ்க் என்றுதான் கேட்கும் பாஸ்.. விஷயம் அப்படி. அந்த விளம்பரத்தில் கதறி அழும் ஆட்களுக்கான தகுதியாக கீழ்க்கண்டதை குறிப்பிட்டிருந்தார்கள்.




1. 3 மணிநேரம் குமுறிக் குமுறி விடாமல் அழத் தெரிந்திருக்க வேண்டும்.


2. கும்பலாகவோ அல்லது தனியாகவோ ஒப்பாரி வைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.


3. 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.


4. ஓவர்டைம் பார்க்கவும் தயாராக இருக்க வேண்டும்.


5. வெளியூர்களுக்குப் போகவும் தயாராக இருக்க வேண்டும்.


6.  ஒரே நாளில் 3 அல்லது 5 சாவு வீட்டுக்கும் கூட போகத் தயாராக இருக்க வேண்டும்.


7. வார இறுதி நாட்களில் இழவு விழுந்தால் அப்போதும் பணிக்குத் தயாராக இருக்க வேண்டும்.


இப்படிப் போகிறது அந்த கண்டிஷன் லிஸ்ட். தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபலமான தாபெலோ என்ற இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகளை நடத்தும் நிறுவனத்தின் பெயரில்தான் இந்த விளம்பரம் வெளியாகியிருந்தது. இதைப் பார்த்த பலரும் பதறிப் போனார்கள். இதுக்குக் கூடவா ஆள் எடுப்பாங்க என்று அரண்டு போய் விட்டார்கள். 


நம்ம ஊர்ப் பக்கமெல்லாம் ஒப்பாரி வைப்பதற்கென்றே ஸ்பெஷலிஸ்ட் பாட்டிகள் இருப்பார்கள். இவர்களை உட்கார வைத்து மைக் செட்டைப் போட்டு விடிய விடிய ஒப்பாரியை லைவ் செய்வார்கள் கிராமப்புறங்களில். கிட்டத்தட்ட அதே கணக்கில்தான் இந்த விளம்பரமும் உள்ளதால் பலரும் கிறுகிறுத்துப் போய் விட்டது.


ஆனால் இப்போது இதை போலியான விளம்பரம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் மறுத்துள்ளது. இது டுபாக்கூர் விளம்பரம். இதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. யாரும் ஏமாந்து போய் விடாதீர்கள் என்று அந்த நிறுவனம் விளக்கியுள்ளது.


நல்லாத்தாண்டா கிளப்புறீங்க.. பீதியை!



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்