சிக்கிம் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராணுவ வெடிபொருட்கள்.. வெடித்துச் சிதறின!

Su.tha Arivalagan
Oct 07, 2023,10:00 AM IST

ராங்போ: சிக்கிமில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான வெடிபொருட்கள் ஆற்றங்கரையில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஆபத்தும் நேரிடவில்லை.


சிக்கிமில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அந்த மாநிலத்தின் வட பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக டீஸ்டா ஆற்றில் பெரும்  வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது. ராணுவ முகாம்கள் பல அந்த ஆற்றின் கரையோரப் பகுதியில் உள்ளன. அவற்றில் பல முகாம்கள் வெள்ளத்தில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. ராணுவ வீரர்கள் பலரும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர்.




இந்த நிலையில் ராங்க்போ பகுதியில் டீஸ்டா ஆற்றின் ஓரமாக திடீரென பலத்த வெடிச்சத்தம் கேட்டது. ராணுவ முகாம் ஒன்றிலிருந்து வெள்ள நீரில் அடித்து வரப்பட்ட வெடி பொருட்கள்தான் அவை. ஆற்றங்கரையோரம் ஒதுங்கிய அந்த வெடிபொருட்கள் திடீரென வெடித்துச் சிதறின. நல்ல வேளையாக அப்பகுதியில் யாரும் இல்லாத காரணத்தால் எந்த அசம்பாவிதமும் நேரவில்லை.


வெள்ள நீரில் ஏதாவது ஆயுதமோ அல்லது வெடி பொருளோ அடித்து வரப்பட்டால், கரை ஒதுங்கினால் அதைத் தொட வேண்டாம் என்றும் உடனடியாக ராணுவத்துக்குத் தகவல் தருமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சிக்கிம் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 7  ராணுவத்தினர் உள்பட 30க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.  லோனாக் ஏரிப் பகுதியில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக மிகப் பெரிய மழை பெய்து, டீஸ்டா ஆற்றை வெள்ளக்காடாக்கியதே இந்த வெள்ளத்திற்கு முக்கியக் காரணமாகும்.