கிடைத்தது குக்கர்.. தேனியில் டிடிவி தினகரனுக்காக அமமுக வெயிட்டிங்.. உற்சாகத்தில் தொண்டர்கள்!

Su.tha Arivalagan
Mar 21, 2024,07:18 PM IST

சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சி வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிடவுள்ளது. இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


நாடாளுமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இந்த கட்சிக்கு இரண்டு தொகுதிகளை பாஜக ஒதுக்கி உள்ளது.


ஒரு தொகுதியிலேயே தாங்கள் போட்டியிட விரும்பியதாகவும் அண்ணாமலை தான் குறைந்தது, இரண்டு தொகுதிகளிலாவது நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இரண்டு தொகுதிகளை ஒதுக்கியதாக டிடிவி தினகரன் நேற்று தெரிவித்திருந்தார். மேலும் தாங்கள் குக்கர் சின்னத்திலேயே போட்டியிட விரும்புவதாகவும் இதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் தினகரன் தெரிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் தற்போது குக்கர் சின்னத்தை,  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.




இதன் காரணமாக வருகின்ற மக்களவைத் தேர்தலில் குக்கர் சின்னத்திலேயே அமமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தேனி மற்றும் இன்னொரு தொகுதியில் அமுமுக போட்டியிட உள்ளது. இதில் தேனி தொகுதியில் டிடிவி தினகரனே களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேனி தொகுதியில் திமுக சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் ஒரு காலத்தில் டிடிவி தினகரனின் நெருங்கிய ஆதரவாளராக திகழ்ந்தவர், அவரது நிழலாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


எனவே தேனி தொகுதியில் டிடிவி தினகரன் - தங்கதமிழ்செல்வன் போட்டியிட்டால் போட்டியும் மோதலும் மிகக் கடுமையாக இருக்கும் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதிமுக சார்பில் தேனி வேட்பாளராக நாராயணசாமி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தினகரனுக்கு ஆதரவாக ஓ பன்னீர் செல்வமும் களம் குதிப்பார் என்பதால் தேனி தேர்தல் பிரச்சாரக் களம் மற்ற தொகுதிகளை விட அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கலாம்.