முதல் முதல்ல வாங்கிய பங்களா..  ரூ. 50 கோடி மதிப்பு.. மகளுக்கு தானமாக கொடுத்த அமிதாப் பச்சன்!

Su.tha Arivalagan
Nov 25, 2023,05:28 PM IST

மும்பை: சினிமாவில் நடிக்க வந்த பிறகு வாங்கிய தனது முதல் சொத்தை மகள் ஸ்வேதா நந்தாவுக்கு தானமாக அளித்துள்ளார் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.


இந்தியத் திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் அமிதாப் பச்சன். இன்று எத்தனையோ சூப்பர் ஸ்டார்கள் வந்து விட்டாலும் கூட ரசிகர்கள் மனதில் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பவர் அமிதாப் பச்சன். இன்று வரை சுறுசுறுப்பாக நடித்துக் கொண்டிருப்பவரும் கூட.


பாலிவுட்டின் ராஜாவாக கொடி கட்டிப் பறந்த அமிதாப்பச்சனுக்கு மும்பை ஜூஹு பகுதியில் பிரம்மாண்டமான பங்களா உள்ளது. பிரதிக்ஷா என்ற பெயருடைய இந்த பங்களாவின் மதிப்பு இன்றைய நாளில் ரூ. 50.63 கோடி ஆகும். இந்த சொத்தை தனது மகள் ஸ்வேதா நந்தாவுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் அமிதாப் பச்சன்.




அமிதாப்பச்சனுக்கு மும்பையில் மொத்தம் மூன்று பிரம்மாண்ட பங்களாக்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் இது. இந்த பங்களாவில் அமிதாப்பச்சன் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். தற்போது இந்த பங்களாவை தனது மகளுக்கு தானமாக கொடுத்துள்ளார். இந்த பங்களாவை தான் முதன்முதலாக மும்பையில் அவர் வாங்கினார். அதாவது நடிகரான பிறகு அவர் மும்பையில் வாங்கிய முதல் சொத்து இந்த பிரதிக்ஷா பங்களா தான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெருமையுடைய பங்களாவை தற்போது தனது மகளுக்கு தானமாக அளித்துள்ளார் அமிதாப் பச்சன்.


நவம்பர் 9ஆம் தேதி இந்த பங்களாவை தான பத்திரத்தின் மூலமாக தனது மகளுக்கு அளித்துள்ளார் அமிதாப்பச்சன். இதற்காக அவர் ரூ. 50.65 லட்சம் முத்திரைக் கட்டணமாகவும் செலுத்தியுள்ளார். பிரதிக்ஷா பங்களாவானது ரெண்டு பிளாட்டுக்களில் அமைந்துள்ளது.  ஒரு பிளாட்டின் அளவு 890.47 சதுர மீட்டர் ஆகும், இரண்டாவது பிளாட்டின் அளவு 674 சதுர மீட்டர் ஆகும்.  இரண்டையும் இணைத்து அந்த இடத்தில் இந்த பங்களா அமைந்துள்ளது.


இந்த பங்களாவில் ஆரம்ப காலத்தில் தனது பெற்றோர் ஹரிவன்ஸ் ராய் பச்சன் மற்றும் தாயார் தேஜி பச்சன் ஆகியோருடன் அமிதாப் பச்சன் வசித்து வந்தார். அமிதாபச்சன் குடும்ப வரலாற்றில் இந்த பங்களாவுக்கு மிக மிக முக்கியமான ஒரு இடம் உண்டு.


கடந்த 2022 ஆம் ஆண்டு தெற்கு டெல்லியில் உள்ள, தனது பெற்றோர் வசித்து வந்த சோபான் என்ற பெயருடைய பங்களாவை 23 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தார் அமிதாபச்சன்.  ஒரு பக்கம் இப்படி சொத்துக்களை விற்பனை செய்தும் மகளுக்கு தானமாக கொடுத்து வந்தாலும் கூட, மறுபக்கம் பல்வேறு சொத்துக்களை வாங்குவது முதலீடு செய்வது என்று பிசியாக இருக்கிறார் அமிதாப் பச்சன். 


அமிதாப்பச்சனின் மகள் ஸ்வேதா நந்தா, ஒரு பன்முக திறமையாளராக வலம் வருகிறார். முன்னாள் மாடல் அழகியாக, தொழில் முனைவராக வலம் வரும் ஸ்வேதா நந்தா, பாரடைஸ் டவர்ஸ் என்ற நாவலை எழுதியுள்ளார். இவர் மிகப் பிரபலமான வர்த்தகரான நிகில் நந்தாவைத் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு நவ்யா மற்றும் அகஸ்தியா நந்தா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.