ஊழலை மூடி மறைக்க பார்க்கிறார்கள்.. எதிர்க்கட்சிகளை விளாசிய அமித்ஷா!

Aadmika
Aug 04, 2023,10:00 AM IST
டெல்லி : எதிர்க்கட்சிகள் கூட்டணி என்பதற்காக டில்லியில் நடக்கும் ஊழல்களை ஆதரிக்க வேண்டாம். அவர்கள் கட்டிய பங்களாக்களை போல் ஊழல்களையும் மூடி மறைக்க பார்க்கிறார்கள் என எதிர்க்கட்சிகளையும், ஆம்ஆத்மி கட்சியை கடுமையாக தாக்கி பேசி உள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

லோக்சபாவில் இன்று டெல்லி சேவை மசோதாவை தாக்கல் செய்து, மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். அப்போது, இந்த மசோதா சுப்ரீம் கோர்ட் உத்தரவின்  அடிப்படையில் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. தேசிய தலைநகரில் எந்த விவகாரம் தொடர்பாகவும் சட்டம் கொண்டு வர பார்லிமென்ட்டிற்கு உரிமை உண்டு என்ற அடிப்படையிலேயே இது கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லிக்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு என அரசியலமைப்பு சட்டம் குறிப்பிடுகிறது.



உங்களின் கூட்டணி கட்சி என்பதற்காக டில்லியில் நடக்கும் ஊழல்களை ஆதரிக்க வேண்டாம் என எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்கிறேன். டில்லியின் நலனை பற்றி கருத்தில் கொள்ளுங்கள். கூட்டணியை அல்ல. பிரதமர் மோடி முழு பெரும்பான்மையோடு மீண்டும் வெற்றி பெறுவார். 

ஆம் ஆத்மி கட்சி 2015 ல் டில்லியில் ஆட்சிக்கு வந்தது. அவர்களின் நோக்கம் போராடுவது தான். சேவை செய்வது கிடையாது. அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான அதிகாரத்தை பெறுவது அவர்களின் பிரச்சனை கிடையாது. ஊழல் தடுப்பு பிரிவை தங்கள் அதிகாரத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்பது தான் அவர்கள் நோக்கம். அப்போது தான் அவர்கள் கட்டிய பங்களாவை போல் ஊழல்களை மறைக்க முடியும் என்றார் அமித்ஷா. 

அமித்ஷாவின் இந்த பேச்சிற்கு ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டன. எதிர்க்ட்சிகளின் கூச்சல், குழப்பத்திற்கு இடையே டில்லி சேவை மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவையில் இருந்து ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.