Vijay Speech: அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா.. விஜய் என்ன பேசுவார்.. பரபரக்கும் அரசியல் களம்!
Dec 06, 2024,11:29 AM IST
சென்னை : சென்னையில் இன்று (டிசம்பர் 06) நடைபெறும் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் பங்கேற்க உள்ளார். இந்த விழாவில் இவர் என்ன பேச போகிறார் என்பது தான் தற்போது தமிழக அரசியல் களத்தின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவரும், சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சரும், சட்ட மேதையுமான டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 06ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 1956 ம் ஆண்டு அம்பேத்கர் மறைந்தார். அன்று துவங்கி இது பீம் ஜெயந்தி, அம்பேத்கர் ஜெயந்தி என பல பெயர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அவரது 78வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவாக சென்னையில் நூல் வெளியீட்டு விழா நடத்தப்பட உள்ளது.
"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" எனும் தலைப்பில் வெளியிடப்பட இந்த நூல் 36 கட்டுரையாளர்களின் தொகுப்பாக வெளியிடப்பட உள்ளது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் அம்பேத்கர் பற்றிய நேர்காணலும் இடம்பெற்றுள்ளது. இருந்தாலும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதால், தான் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து, அதற்கு விளக்கமும் அளித்துள்ளார் திருமாவளவன். அதே சமயம் விஜய் பங்கேற்க உள்ளது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
இன்று மாலை 5 மணியளவில் நந்தம்பாக்கம், வர்த்தக மைய அரங்கில் விழா நடைபெறவுள்ளது. விஜய் அரசியலுக்கு வருகிறார், கட்சி துவங்குகிறார் என்றதும் ஆரம்பத்தில், இது சினிமாத்துறையில் எம்.ஜி.ஆர் தொட்டு காலம் காலமாக நடப்பது தானே என நினைக்கப்பட்டது. ஆனால் அக்டோபர் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் விஜய் தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை மிக பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாக நடத்தி முடித்ததில் இருந்தது விஜய் மீதான அரசியல் கண்ணோட்டம் அனைவரிடமும் மாறி உள்ளது. அதிலும் முதல் மாநாட்டில் விஜய் பேசிய அனல் தெரிக்கும் பேச்சு, மாநாடு முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை பேசப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்