ஆட்டம் பாட்டத்துடன் களை கட்டிய அம்பானி வீட்டுக் கல்யாணம்.. 3 நாட்கள் ஜாம் நகரே ஆடிப் போயிருச்சே!

Meenakshi
Mar 04, 2024,06:07 PM IST

ஜாம்நகர்: தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இல்ல திருமண விழாவில் 1000க்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்று ஜாம் நகரையே குலுங்க வைத்து விட்டனர்..2500 வகையான உணவுகள் பரிமாறப்பட்டு கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது இந்த திருமண முன்வைபவ விழா.


தொழிலதிபர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியர்களின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. ஆனந்த் அம்பானியின் திருமணத்தையொட்டி 3 நாள் விழாவுக்கு ஜாம் நகரில் ஏற்பாடு செய்யப்பட்டது. அம்பானி வீட்டு திருமணம்னா சும்மாவா என்று அனைவரும் வாய் பிளக்கும் அளவிற்கு மிகவும் பிரம்மாண்ட அளவில் திருமண முன்வைபவங்கள் நடைபெற்றுள்ளது. 




ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்டுக்கும் வருகிற ஜூலை மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன் வைபவங்கள் தான் தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. இந்த திருமணத்திற்காக தான் ஜாம்நகரில் உள்ள விமான நிலையமும் 10 நாட்களுக்கு மட்டும் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டது.


விழாவையொட்டி உலகில் உள்ள பிரபலங்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடினர். நடிகர் ரஜினிகாந்த், அமிர்தாப் பச்சன், ஷாருக்கான்,சல்மான் கான், அமீர கான், சஞ்சய் தத், அபிஷேக் பச்சன்,  ராம் சரண், சயீப் அலிகான், ரன்பீர் சிங், ரன்வீர் சிங், அட்லீ ஐஸ்வர்யா ராய், கரீனா கபூர், தீபிகா படுகோன், சாரா அலிகான், அலியா பட்,  ஜான்வி கபூர், கேத்ரினா கைஃப் உள்ளிட்ட இந்திய பிரபலங்கள் ஜாம்நகரில் குவிந்தனர்.




கிரிக்கெட் வீரர்கள் சச்சின், தோனி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, மகாராஷ்டிரா, அஸ்ஸாம் முதல்வர்களும் இவ்விழாவில் பங்கேற்றனர். மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்,  அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்பின்  மகள் இவாங்கா உட்பட வெளிநாட்டு பிரபலங்களும், ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டனர். காலை, மாலை, மதியம், இரவு வேலைகளில் இந்தியா, தாய்லாந்து, மெக்ஸிகோ என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன.


சிறப்பு விருந்தினர்களின் உணவிற்காக ரூ. 130 செலவிடப்பட்டுள்ளதாம். கடந்த 3 நாட்கள் நடைபெற்ற திருமண வைபவத்திற்காக ரூ.1250 கோடி  செலவு செய்யப்பட்டுள்ளனவாம்.. நீத்தா அம்பானி காஞ்சிபுரம் பட்டுச் சேலையில் வந்ததும், அழகாக நடனமாடியதும் இந்த விழாவின் ஹைலைட்டாக அமைந்தது.