உதவியாளரை பலாத்காரம் செய்த ஜானி மாஸ்டர் தலைமறைவு.. அல்லு அர்ஜூன் அதிரடி ஸ்டேட்மென்ட்!

Su.tha Arivalagan
Sep 17, 2024,09:27 PM IST

ஹைதராபாத்: பிரபல தெலுங்குப் பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் மீது தனது முன்னாள் பெண் உதவியாளரை  பலமுறை பலாத்காரம் செய்ததாகவும், அடித்து உதைத்து சித்திரவதை செய்ததாகவும், மிரட்டியதாகவும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


2009ம் ஆண்டு முதல் டான்ஸ் மாஸ்டராக தனது திரையுலக பயணத்தைத் தெலுங்குத் திரையுலகில் தொடங்கியவர் ஜானி மாஸ்டர். இவரது முழுப் பெயர் ஷேக் ஜானி பாஷா. ஈகா, ஜெய் ஹோ, பாகுபலி, ஜெய்லர், புஷ்பா, திருச்சிற்றம்பலம், மாரி 2 உள்பட பல்வேறு படங்களில் நடனம் வடிவமைத்துள்ளார். குறுகிய காலத்தில் மிகப் பெரிய பிரபலமாக மாறியவர் ஜானி மாஸ்டர்.


ரஜினி - விஜய் -தனுஷ் பட மாஸ்டர்:




ரஜினிகாந்த், தனுஷ், சல்மான் கான், பிரபாஸ், ராம் சரண், அல்லு அர்ஜூன் உள்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுக்கும் இவர் டான்ஸ் வடிவமைத்துள்ளார்.


திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்ற மேகம் கருக்காதா பாடலுக்காக 2022ம் ஆண்டுக்கான தேசிய விருதையும் கூட சமீபத்தில் அவர் பெற்றார். கடைசியாக அவர் ஜெயிலர் படத்திற்கு நடனம் வடிவமைத்திருந்தார். விஜய்யின் பீஸ்ட் படத்திலும் கூட ஜானி மாஸ்டர் நடனம் வடிவமைத்திதருந்தார்.


இப்போது ஜானி மாஸ்டர் மீது அவரது முன்னாள் பெண் உதவியாளர் அதிர வைக்கும் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் பேரில் ஹைதராபாத் போலீஸார் 3 முக்கியப் பிரிவுகளின் கீழ் வழக்குப் செய்துள்ளனர். புகார் கொடுத்த பெண்ணுக்கு தற்போது 21 வயதாகிறது. அவர் மைனர் வயதில் இருந்தபோதுதான் இத்தனைக் கொடுமைகளையும் அவர் சந்தித்துள்ளார். எனவே ஜானி மாஸ்டர் மீது போக்சோ சட்டப் பிரிவும் பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


பலமுறை பலாத்காரம் - அடி உதை சித்திரவதை:


ஜானி மாஸ்டர் மீது அந்தப் பெண் கொடுத்துள்ள புகாரில் முக்கியமாக கூறியிருப்பதாவது:


- பலமுறை என்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார் ஜானி மாஸ்டர்.


- தனது இஷ்டப்படி என்னை நடத்தினார். நான் உடன்பட மறுத்தால் அடித்து உதைப்பார். மிரட்டுவார். அவரது மனைவிக்கும் இதெல்லாம்  தெரியும். அவரும் என்னை அடிப்பார்.


- சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் ஹைதராபாத் நர்சிங்கி பகுதியில் உள்ள எனது வீடு என பல இடங்களில் வைத்து என்னை பலாத்காரம் செய்தார்.


- தனது செயல்களை யாரிடமாவது சொன்னால் தொலைத்துக் கட்டி விடுவேன் என்றும் மிரட்டினார். திரையுலகில் தனக்குள்ள செல்வாக்கை வைத்துக் கொண்டு எனக்கு சினிமா பட வாய்ப்பு வராமல் தடுத்து வந்தார். இதனால் நான் அவரை நம்பியிருக்கும் நிலையை உருவாக்கினார்.


- என்னை மதம் மாறுமாறும் கட்டாயப்படுத்தி அடித்து உதைத்துள்ளார். ஒரு முறை தலைமுடியைப் பிடித்து இழுத்து வேனிட்டி வேனில்  இருந்த கண்ணாடியில் மோதினார்.


தலைமறைவானார் ஜானி மாஸ்டர்:




இந்தப் பெண்ணின் புகாரில் போலீஸார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததைத் தொடர்ந்து ஜானி மாஸ்டர் தற்போது தலைமறைவாகி விட்டார்.


ஜானி மாஸ்டர், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியிலும் உறுப்பினராக உள்ளார். சட்டசபைத் தேர்தலின்போது பவன் கல்யாணுக்காக தேர்தல் பிரச்சாரமும் கூட செய்தார். அவர் பாலியல் கேஸில் மாட்டிக் கொண்டதைத் தொடர்ந்து ஜன சேனா கட்சி விவகாரங்களிலிருந்து விலகியிருக்குமாறு அவரது கட்சி உத்தரவிட்டுள்ளது. மேலும் தெலுங்குத் திரையுலகமும் ஜானி மாஸ்டர் விவகாரம் குறித்து விசாரணை நடத்தவுள்ளது.


அல்லு அர்ஜூன் அதிரடி ஸ்டேட்மென்ட்:


இதற்கிடையே நடிகர் அல்லு அர்ஜூன், ஜானி மாஸ்டரால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது படங்களில் வாய்ப்பளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.  இதுகுறித்து ஒரு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசும்போது கூறுகையில், தெலுங்கு பெண்கள் திரையுலகில் தைரியமாக சேர வேண்டும். அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பான பணிச் சூழல் ஏற்படுத்தப்படும்.  பெண்களுக்குப் பாதுகாப்பான துறையாக தெலுங்குத் திரையுலகம் நிச்சயம் விளங்கும்.


ஜானி மாஸ்டர் விவகாரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எனது படங்களில் வாய்ப்பளிக்கப்படும். எங்களது கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அனைத்துப் படங்களிலும் அவர் நிச்சயம் இடம் பெறுவார். அவர் ஏற்கனவே புஷ்பா 2 படத்தில் பணியாற்றியுள்ளார். மேலும் சில முக்கியப் படங்களிலும் இணைந்துள்ளார் என்று கூறினார் அல்லு அர்ஜூன்.


இந்திய அளவில் மிகப் பிரபலமான டான்ஸ் மாஸ்டரான ஜானி மாஸ்டர் மீது எழுந்துள்ள இந்தப் பெரும் புகார் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.




செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்