Schools reopening: பசங்களா பைகளை ரெடி பண்ணுங்க.. தமிழ்நாட்டில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு!

Meenakshi
May 24, 2024,02:51 PM IST

சென்னை: தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.


தமிழகத்தில் 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் மார்ச் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடந்தது. அதன்பின்னர் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 24ம் தேதியில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. வழக்கமாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை  முடிந்து ஜூன் முதல் வாரத்தில் தான் பள்ளிகள் திறக்கப்படும். இருப்பினும் ஜூன் 4ம் தேதி மக்களவை தேர்தலின் வாக்குகள் எண்ணப்படுவதால் பள்ளிகள் திறப்பது எப்போது இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர். 


இந்த நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை அறிவிப்பின் படி ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:



அதில், " 2024-2025 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜூன் 6ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும். எனவே, குறிப்பிட்ட நாளில் பள்ளிகளை துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். அனைத்து பள்ளிகளை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுத்திடவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது"  என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.


இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் எக்ஸ் தள பதிவில், " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி 2024-2025ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு வருகின்ற ஜூன் ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது.  மாணவச் செல்வங்களை அன்போடு வரவேற்கின்றோம்" என்று கூறியுள்ளார்.