தொகுதி மறுசீரமைப்பால் ஆபத்து.. மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Feb 25, 2025,06:30 PM IST

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு காரணமாக தமிழ்நாட்டுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு தொடர்பாக விவாதிக்க, மார்ச் 5ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் அடுத்த மாதம் 14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், சென்னையில் அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது.  இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். 


அப்போது அவர் பேசுகையில், மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரைமப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு  மேல் கத்தி தொங்குகிறது.  இது தொடர்பாக விவாதிக்க வருகிற 5ம் தேதி அனைத்துக்கட்சிகள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த 40 கட்சிகளை அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று அந்த கட்சிகளுக்கு கடிதம் அனுப்ப உள்ளோம்.




மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு வெற்றி பெற்றுள்ளது. மக்கள் தொகை குறைவாக இருப்பதினால், தமிழ்நாட்டின் மக்களவை இடங்கள் 39ல் இருந்து 31 ஆக குறையும். 8 நாடாளுமன்றத் தொகுதிகள் குறைவதினால், நமது பிரதிநிதித்துவமும் குறையும்.  அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் என்று கூறியுள்ளார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள அறிக்கை


இதற்கிடையே, இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:


தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை மிகுந்த ஆபத்தாக இருப்பதை அனைவரின் கவனத்துக்கும் கொண்டு வருகிறேன்.


மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முதலிய தென் மாநிலங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. ஆனால், அதுவே நாடாளுமன்றத்தில் நம் பலம் குறையக் காரணமாகி விடும்; நம் குரலை நசுக்கிவிடக் கூடும் என்றால் அது எவ்வகையில் நியாயமாகும்?


ஜனநாயக முறையில் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தும் எந்த நடவடிக்கையினையும் செய்யவே கூடாது என்பதல்ல எங்கள் வாதம். அதற்காக, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தில் சமரசம் செய்துகொள்ளும் பேச்சுக்கே இடமில்லை! 


கூட்டாட்சியியல் கோட்டுபாடுகளைப் பாதுகாக்கும் விதத்தில், நியாயமான, வெளிப்படைத்தன்மை மிக்க ஒரு வழிமுறையைப் பின்பற்றுங்கள் என்றுதான் நாங்கள் கேட்கிறோம்.


இச்சூழ்நிலையில், தமிழ்நாட்டின் எதிர்காலத்தைப் பாதிக்கும் இந்த மிக முக்கியப் பிரச்சினையைப் பற்றிக் கலந்தாலோசிப்பதற்காக, தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் அழைப்பு விடுக்கிறேன்.


நம் தாய்த் தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காக்க, கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஓரணியில் திரள்வோம்! சூழ்ந்துள்ள ஆபத்தை நம் ஒற்றுமையால் வெல்வோம்!