அதிமுக கூட்டணியில் நேற்று புதிய தமிழகம்.. இன்று பார்வர்டு பிளாக் .. அடுத்தடுத்து சேரும் கட்சிகள்!

Meenakshi
Mar 06, 2024,06:15 PM IST

சென்னை: அதிமுக கூட்டணியில் நேற்று புதிய  தமிழகம் இணைந்த நிலையில், இன்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது. திமுக அணியைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியிலும் அடுத்தடுத்து கட்சிகள் இணைவது குறிப்பிடத்தக்கது.


நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பிற்கும் தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வரும் நிலையில், பெரிய கட்சிகள் மற்றும் சிறிய கட்சிகள் என அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. ஒவ்வொரு கட்சி அலுவலகங்களிலும் தேர்தல் குறித்த வேலைகளில் தீவிரம் காண்பித்து வருகின்றன. 




தேர்தல் தேதி அறிவிப்பு இல்லாமலேயே கட்சிகள் படு வேகமாக தேர்தல்  வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திமுக, அதிமுக, பாஜக என முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்து இறுதி முடிவிற்கு வந்து கொண்டுள்ளன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் அலுவலகத்திற்கு அதிமுக குழு நேற்று பேச்சு வார்த்தை நடத்தியது. அதிமுக குழுவில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சுமூக நிலை எட்டியது. இதன் காரணமாக அதிமுகவில்  புதிய தமிழகம் கட்சியின் கூட்டணி உறுதியானது. 


இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி, கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. டாக்டர் கிருஷ்ணசாமியின் விருப்பத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இடம் எடுத்துரைப்போம். மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி தொகுதிகள் இறுதி செய்யப்படும். இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக  சட்டசபைத் தேர்தல் வரையிலும் தொடரும் என்றார்.


நேற்று அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ள நிலையில், இன்று அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இணைந்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மத்திய பாஜகவுக்கு எதிராக உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிதான் இந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி.  எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழகத்தில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. 


அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின்  மாநில பொதுச் செயலாளர் கதிரவன் இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை  நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து விலகி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி இந்த நடவடிக்கை திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


ஆனால் திமுக கூட்டணியில் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால்தான் இக்கட்சி அதிமுக பக்கம் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.