தமிழ்நாட்டில்.. அசைக்க முடியாத சக்தியாக திமுக.. வெட்ட வெளிச்சமாக்கிய எக்சிட் போல் முடிவுகள்!

Su.tha Arivalagan
Jun 02, 2024,05:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக அசைக்க முடியாத சக்தியாக திகழ்வைதேய எக்சிட் போல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன. அதேபோல தேசிய அளவிலும் பாஜகவுக்கு மாற்று இன்னும் உருவாகவில்லை, இந்தியா கூட்டணியின் சக்தி இன்னும் வலுவாக இல்லை என்பதையும் இந்த எக்சிட் போல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.


Exit போல்  முடிவு என்பது Exact தேர்தல் முடிவாக என்றுமே இருந்ததில்லை. ஆனால் என்ன மாதிரியான டிரெண்ட் நிலவுகிறது என்பதை ஊகிக்க இது உதவும். அந்த வகையில் நேற்று வெளியான வாக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் அனைத்துமே சொல்லி வைத்தாற் போல தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறியுள்ளன. 2வது இடமே இந்தியா கூட்டணிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 


தேசபந்து உள்ளிட்ட சில மீடியாக்கள் மட்டுமே இந்தியா கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பு முடிவுகள் எந்த அளவுக்கு பலிக்கப் போகிறது என்று தெரியவில்லை. ஆனால் படிக்க சுவாரஸ்யமாக இருப்பதால் இவை அனைத்துமே மக்களால் கவனிக்கப்பட்டுள்ளன.


வலுவான நிலையில் திமுக:



இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளை உற்று நோக்கினால் சில விஷயங்கள் தெளிவாகும். ஒன்று, தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தியாக திமுக திகழ்கிறது. தமிழ்நாட்டில் திமுகவின் செல்வாக்கு கொஞ்சமும் குறையவில்லை. அதே அளவிலேயே உள்ளது. மக்களுக்கு திமுக மீது பெரிய அளவில் அதிருப்தி எழவில்லை. ஆட்சிக்கு எதிரான அலை என்று எதுவும் உருவாகவில்லை. மக்கள் திமுக கூட்டணி பக்கமே உள்ளனர் என்பதை இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.


தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் திமுகவே அதிக அளவிலான தொகுதிகளைக் கைப்பற்றும் என்று கிட்டத்தட்ட அத்தனை கருத்துக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. அதிமுக கூட்டணிக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் ஒற்றை இலக்கத்திலேயே வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் இந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன.


பாஜக ஆட்சி அகல்கிறது.. இந்தியா கூட்டணி வெல்கிறது- தேசபந்து எக்சிட் போல்!


பலவீனமான அதிமுக:




அதிமுகவைப் பொறுத்தவரை பாஜகவை உதறி விட்டு இந்தத் தேர்தலில் தனி அணி அமைத்துப் போட்டியிட்டது. அந்தக் கூட்டணியில் தேமுதிக மட்டு சற்று பெரிய கட்சியாக இருந்தது. மறுபக்கம் பாமகவை கூட்டு சேர்த்துக் கொண்டும், வேறு சில உதிரிக் கட்சிகளை இணைத்துக் கொண்டும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிட்டது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவுக்கு ஆதரவளித்தது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது.


பலமுனை  போட்டி நிலவிய போதிலும், பாஜக தரப்பில் கடுமையான அழுத்தங்கள், நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அதிமுக கொடுத்த கடுமையான போட்டிக்கு மத்தியிலும் திமுக தமிழ்நாட்டை ஸ்வீப் செய்யப் போவதாக கிட்டத்தட்ட அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறியிருப்பது நிச்சயம் கவனிப்புக்குரியது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுகவுக்கு மாற்று சக்தி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இல்லை என்பதையே இது காட்டுவதாக தெரிகிறது.


2019 மீண்டும் திரும்புமா:




கடந்த 2019 தேர்தலிலும் திமுக கூட்டணியே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. மொத்தம் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தேனி தொகுதியில் மட்டுமே அதிமுக வென்றது. பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன் என்று முக்கியத் தலைவர்கள் எல்லாம் தோல்வியைத் தழுவினர். இந்த தலைவர்கள் இந்த முறையும் தேர்தல் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கடந்த முறை நிகழ்த்தியை மேஜிக்கையே இந்த முறையும் திமுக நிகழ்த்தக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணிப்புகள் கூறுகின்றன. உண்மையான முடிவுகளை அறிய இன்னும் 2 நாட்கள் காத்திருப்போம்.