எதிர்பாராத ட்விஸ்ட்... அனைத்து எக்சிட் போல் கணிப்புக்களையும் பொய்யாக்கிய லோக்சபா தேர்தல் ரிசல்ட்!

Su.tha Arivalagan
Jun 04, 2024,12:57 PM IST

டில்லி :  எக்சிட் போல் கருத்து கணிப்புகள் அத்தனையையும் பொய்யாக்கும் விதமாக 2024 லோக்சபா தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. இது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமின்றி எக்சிட் போல் முடிவுகளை வெளியிட்ட மீடியாக்களுக்கும் அதிர்ச்சி அளிப்பதாகவே அமைந்துள்ளது.


நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என சமீபத்தில் பல்வேறு மீடியாக்கள், exit poll வெளியிட்டன. இதில் சொல்லி வைத்தது போல் அனைவரும் தேசிய அளவில் பாஜக கூட்டணி 350 சீட்களுக்கு மேல் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி 150 முதல் 170 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என சொல்லப்பட்டது. ஆனால் இந்த முறை தேர்தல் முடிவுகள் யாரும் கணிக்க முடியாததாக இருந்து வருகின்றன. நொடிக்கு நொடி முன்னிலை நிலவரங்கள் மாறி வருகின்றன.




இந்தியா கூட்டணி 200 சீட்களை கூட பிடிக்காது என பலரும் அடித்து கூறி வந்தனர். ஆனால் கருத்து கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கும் விதமாக இந்தியா  கூட்டணி 228 க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஒருவேளை தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் வெளியான பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கவோ அல்லது குறையவோ வாய்ப்பு ஏற்படலாம். அப்படியே குறைந்தாலும் அதிகபட்சம் 10 முதல் 15 இடங்கள் மட்டுமே குறைய வாய்ப்புள்ளது. எப்படி பார்த்தாலும் இந்தியா கூட்டணிக்கு 200 இடங்களுக்கும் அதிகமாகவே வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.


அதே போல் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாட்டில் 3 சீட்டும், தேசிய அளவில் 350 அதிகமான சீட்டுகளும் வரும் என்று சொல்லப்பட்ட கருத்து கணிப்புகளும் பொய்யாகி உள்ளது. தமிழகத்தில் ஒரு இடம் கூட அக்கூட்டணிக்கு கிடைக்காத நிலையே உள்ளது. தர்மபுரியில் பாமக முன்னிலை வகித்து வந்தது. தற்போது அதுவும் போய் விட்டது. இந்த முறை இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளதால் பாஜக கூட்டணி மொத்தமாக 300 சீட்களைத் தொடுவதே சிரமமாக இருக்கும் நிலையே உள்ளது.


ஓட்டு எண்ணிக்கை துவங்கி, இரண்டு மணி நேரம் வரை பிரதமர் மோடியே பின்னடைவை சந்தித்து வந்தது. அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பாஜக ஸ்டார் வேட்பாளர்கள் பலரும் தற்போது வரை பின்னடைவை சந்தித்து வருவது, காங்கிரஸ் மற்றும் அதன்  கூட்டணியில் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என சொல்லப்பட்ட பல வேட்பாளர்கள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த வருவதும் யாரும் எதிர்பாராத ட்விஸ்டாக அமைந்துள்ளது.


எக்சிட் போல்கள் அனைத்தும் பொய்யானவை, கோடி மீடியா போல்கள் அவை.. நிஜமான ரிசல்ட் ஜூன் 4ம் தேதிதான் தெரியும் என்று நேற்று ராகுல் காந்தி அதிரடியாக கூறியிருந்தார். அது தற்போது உண்மையாகியுள்ளது. பாஜக கூட்டணியாக ஆட்சியை மீண்டும் பிடிக்க வாய்ப்புகல் இருந்தாலும் கூட கடந்த காலங்களைப் போல அந்த ஆட்சி செயல்பட முடியாத நிலையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.