அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன.. மதுரையை தவிர.. எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சனம்!

Meenakshi
Feb 20, 2024,07:20 PM IST

சென்னை: ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர... தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா ? என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி கேட்டு டுவிட் போட்டுள்ளார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன்.


இன்று ஜம்முவில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இதனை தொடர்ந்து ராஜ்கோட், மங்களகிரி, பதிண்டா, கல்யாணி மற்றும் ரேபரேலி ஆகிய ஐந்து இடங்களில் அமைக்கப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிப்ரவரி 25ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். 


இந்த சமயத்தில் மதுரையில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படாமல் வெற்றிடமாகவே இருக்கிறதே என்ற ஏக்கம் மதுரை மக்களிடம் எழுந்துள்ளது. இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், இதை எதிரொலித்து ஒரு டிவீட் போட்டுள்ளார்.




இதுதொடர்பாக அவர் போட்ட டிவீட்டில், அடுத்த ஆறு நாட்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகளை திறந்து வைக்கிறார் பிரதமர்.  ஒரே அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ்களும் திறக்கப்பட்டு விட்டன மதுரையைத் தவிர.  தமிழ்நாட்டிற்கு நீங்கள் தருவது தப்புத் தப்பாய் உச்சரிக்கும் திருக்குறள் மட்டும் தானா? என்று கேட்டுள்ளார் சு. வெங்கடேசன்.


கடந்த சட்டசபைத் தேர்தலில் மதுரை எய்ம்ஸ் குறித்து பிரசாரம் செய்து உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் ஸ்கோர் செய்தார். ஒற்றை செங்கலுடன் அவர் பிரச்சாரம் செய்தது பலரையும் கவர்ந்தது. இப்போது லோக்சபா தேர்தலிலும் அதே பாணியை திமுக கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தேர்தலுக்குள்ளாவது மதுரையில் எய்ம்ஸ் அமைந்தால் குறைந்தபட்சம் இந்த ஒற்றை செங்கல் பிரச்சாரத்தை தடுக்க முடியுமே..  என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்!