20 காளைகளை அடக்கி அதிர வைத்த அபி சித்தர்.. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் நாயகன்!

Su.tha Arivalagan
Jan 16, 2025,06:22 PM IST

மதுரை: படு விறுவிறுப்பாக நடந்து வந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக முடிவடைந்துள்ளது. மதுரை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபி சித்தர் 20 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்து கார் பரிசை வென்றுள்ளார்.


உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று சிறப்பாக நடைபெற்றது. காலையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் போட்டியைத் தொடங்கி வைத்தார். 8 சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியில் கிட்டத்தட்ட 989 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இறுதிச் சுற்றில் 43 பேர் கலந்து கொண்டனர்.




இதில் இறுதிச் சுற்றின் முடிவில் பூவந்தி அபி சித்தர் 20 காளைகளை அடக்கியிருந்தார். 2வது இடத்தை பொதும்பு ஸ்ரீதர் பெற்றார். அவர் அடக்கிய காளைகளின் எண்ணிக்கை 14 ஆகும். மடப்புரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் 10 காளைகளை அடக்கி 3வது இடம் பெற்றார். கடந்த முறை விட்ட முதலிடத்தை இந்த முறை பிடித்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அபி சித்தர் சந்தோஷத்துடன் கூறினார். அவரை சக வீரர்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டாடினர்.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் சிறந்த மாடு பிடி வீரராக உருவெடுத்துள்ளார் அபி சித்தர். அபி சித்தருக்கு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பரிசுகள் குவிவது முதல் முறையல்ல. முதலிடத்தைப் பிடிப்பதை ஒரு தொடர் கதையாகவே அவர் வைத்துள்ளார்.  2023 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது முதல் பரிசைப் பெற்று அசத்தியவர் அபி சித்தர்.  ஆனால் 2024 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின்போது அது மிஸ்ஸாகிப் போனது.




2024 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின்போது 2வது இடத்தைப் பிடித்திருந்தார் அபி சித்தர். அந்தப் போட்டியின்போது அவர் 17 காளைகளை அடக்கியிருந்தார். ஆனால் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக்கு முதல் பரிசு கார் வழங்கப்பட்டது.  இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கும் தொடர்ந்திருந்தார் அபி சித்தர்.


ஆனால் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு ஏறு தழுவுதல் ஸ்டேடியத் தொடக்க விழாவின்போது  நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபி சித்தர், அதிரடியாக 10 காளைகளை அடக்கி முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு மஹிந்திரா தார் கார் பரிசு வழங்கப்பட்டது. 


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்