"இந்தியர்" ஆனார் அக்ஷய் குமார்.. குடியுரிமை கிடைத்தது!

Su.tha Arivalagan
Aug 15, 2023,01:51 PM IST

டெல்லி: கனடா குடியுரிமையுடன் இந்தியாவில் வசித்து வந்த நடிகர் அக்ஷய்குமார் மீண்டும் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார்.


"இதயத்திலும், குடியுரிமையிலும் நான் இந்தியன்" என்று டிவீட் போட்டுள்ளார் அக்ஷய்குமார். 




இந்தியாவில் பிறந்தவராக இருந்தாலும் கூட கனடா நாட்டுக் குடியுரிமையுடன் இருந்து வந்தார் அக்ஷய் குமார். ஆனால் இதை வெளிப்படையாக அவர் சொல்லாமல் வைத்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இது சர்ச்சையானது. தேசபக்தி குறித்து வாய் வலிக்கப் பேசும் அக்ஷய்குமார் முதலில் தான் இந்தியக் குடியுரிமை உள்ளவரா என்பதை விளக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடித்தன.


அவர் முதலில் இந்தியரே கிடையாது. கனடா குடியுரிமையுடன் இந்தியாவில் வசித்து வருகிறார். இந்தியக் குடியுரிமை இல்லாமல் அவர் படங்களில் தேச பக்தி குறித்து வகுப்பெடுக்கக் கூடாது என்று பலரும் கிண்டலடித்தனர். 


இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் அவர் அளித்த ஒரு பேட்டியில், எனக்கு எல்லாமே இந்தியாதான்.  இந்தியாதான் எனக்குப் பெயரையும், புகழையும், பணத்தையும் கொடுத்தது.  ஆனால் எனது கனடா  குடியுரிமையைக் குத்திக் காட்டி பலர் பேசுவது வருத்தம் அளிக்கிறது. அது உண்மயைில் கெளரவக் குடியுரிமைதான் என்று கூறியிருந்தார் அக்ஷய்குமார்.


தான் இந்தியக் குடியுரிமை பெற முடிவு செய்திருப்பதாகவும் பின்னர் அக்ஷய்குமார் கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது அவர் மீண்டும் இந்தியக் குடியுரிமையைப் பெற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவீட் போட்டுள்ளார். அதில் இந்தியக் குடியுரிமை கிடைத்ததற்கான ஆவணத்தின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.