உலக வங்கியின் தலைவராகும் இந்தியர் அஜய்பால் சிங் பங்கா... யார் இவர்?

Su.tha Arivalagan
May 04, 2023,10:12 AM IST
டெல்லி: உலக வங்கியின் அடுத்த தலைவராக இந்தியாவைச் சேர்ந்த அஜய்பால் சிங் பங்கா பதவியேற்கிறார்.

தற்போது தலைவராக இருக்கும் டேவிட் மல்பாஸ் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அந்த இடத்திற்கு அஜய்பால் சிங் பங்கா வருகிறார்.  

அஜய்பால் சிங் பங்கா தற்போது ஜெனரல் அட்லான்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கிறார். இதற்கு முன்பு மாஸ்டர்கார்ட் நிறுவனத்தின் தலைவராகவும், அதன் தலைமை செயலதிகாரியாகவும் 11 வருடங்கள் பணியாற்றியுள்ளார்.



63வயதாகும் அஜய்பால் சிங் பங்கா நெஸ்லே நிறுவனத்தில் தனது தொழில்முறை வாழ்க்கையைத் தொடங்கியவர். பத்து வருடங்கள் அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங், விற்பனை மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் இருந்துள்ளார்.

பங்காவின் தந்தை ஒரு ராணுவ அதிகாரி. புனேவில்தான் பிறந்தார் பங்கா. படித்தது டெல்லியில். அகமதாபாத் ஐஐஎம்மில் எம்பிஏ முடித்தார். நெஸ்லேவில் பணியைத் தொடங்கிய பின்னர் பெப்சிகோவில் இணைந்தார். அந்த நிறுவனம் இந்தியாவில் பாஸ்ட் புட் தயாரிப்புகளை தொடங்க உதவி புரிந்தார்.

1996ம் ஆண்டு  சிட்டிகுரூப் நிறுவனத்தில் இணைந்தார். அந்த நிறுவனத்தின் ஆசியா பசிபிக் பிராந்தியத் தலைவராக  2008ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மாஸ்டர்கார்ட் நிறுவனத்தில் இணைந்தார். 

அஜய் பங்காவுக்கு 2016ம் ஆண்டு இந்தியஅரசு பத்மஸ்ரீ விருது கொடுத்துக் கெளரவித்துள்ளது.  இதேபோல பல்வேறு சர்வதேச விருதுகளையும் பங்கா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.