நான் ஐஸ்வர்யாவின் பினாமி".. அதிர வைத்த ஈஸ்வரி.. போலீஸ் குழப்பம்!

Su.tha Arivalagan
Mar 24, 2023,11:11 AM IST
சென்னை: ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் வீட்டில் திருடி கைதான ஈஸ்வரி கொடுத்துள்ள வாக்குமூலமும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள நகை, பணமும் போலீஸாருக்கு பெரும் குழப்பத்தைக் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் சமீபத்தில் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது வீட்டிலிருந்து 60 பவுன் தங்க, வைர நகைகள், நவரத்தின கல் ஆகியவை காணாமல் போய் விட்டதாக கூறியிருந்தார்.  வீட்டு வேலைக்காரர்கள் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.



இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீஸார் நடத்திய விசாரணையில் மந்தைவெளியைச் சேர்ந்த 46 வயது வேலைக்காரப் பெண் ஈஸ்வரி சிக்கினார். அவர்தான் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளைத் திருடியதாக தெரிய வந்தது. இதையடுத்து ஈஸ்வரி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் டிரைவர் வெங்கடேசன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து நகைகளைக் கைப்பற்றினர் போலீஸார். ஆனால் கிட்டத்தட்ட 100 பவுன் நகைகள், 30 கிராம் வைரம் மற்றும் 4 கிலோ வெள்ளி. ரூ. 95 லட்சம் மதிப்பிலான ஒரு வீட்டுப் பத்திரம் என  பெரும் குவியலே சிக்கியுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 3 கோடிக்கு வரும் என்று தெரிகிறது. ஐஸ்வர்யா கொடுத்த புகாரில் 60 பவுன் நகைகள்தான் திருட்டுப் போனதாக கூறியிருந்தார். ஆனால் ஈஸ்வரியிடமிருந்து கிட்டத்தட்ட 3 கோடிக்கு நகைகள், சொத்துப் பத்திரம் சிக்கியுள்ளன. இது போலீஸாரை குழப்பியுள்ளது.

மேலும் விசாரணையின்போது ஈஸ்வரி கூறுகையில், தனது கணவர் அங்கமுத்துவிடம், தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் பினாமி என்று கூறி நகைகளை வீட்டில் வைக்கக் கூறியுள்ளார். ஐஸ்வர்யா திரும்பக் கேட்கும்போது இவற்றை நாம் திரும்பத் தர வேண்டும் என்றும் கூறியதாக போலீஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இதுதொடர்பாக அங்கமுத்துவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, ஈஸ்வரி நடத்திய  திருட்டு நாடகம் குறித்து அவருக்கு எதுவுமே தெரியவில்லை என்று தெரிய வந்துள்ளது.

தற்போது விசாரணையை விரிவுபடுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளதாம். ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் திருமண வீடியோ, புகைப்படங்கள், வீட்டு விழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஆகியவற்றை வைத்து ஐஸ்வர்யா அணிந்திருந்த நகைகளை அடையாளம் கண்டு, கைப்பற்றப்பட்ட நகைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க போலீஸார் முடிவு செய்துள்ளனர். ஐஸ்வர்யா வீடு மட்டுமல்லாமல், ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரது வீடுகளிலும் வேலை பார்த்து வந்துள்ளாராம் ஈஸ்வரி.

குழப்பத்தை சரி செய்ய ஐஸ்வர்யா, தனுஷ் ஆகியோரின் வங்கிலாக்கர்களை திறந்து பார்த்து ஆய்வு நடத்தவும் போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகே இந்த வழக்கில் தெளிவு கிடைக்கும் என்று போலீஸார் நம்புகிறார்கள்.