நீங்க ஏர்டெல்லா யூஸ் பண்றீங்க.. ஜூலை 3 முதல் புதுக் கட்டணம் வந்துருச்சு.. இதைப் படிங்க முதல்ல!

Meenakshi
Jun 28, 2024,05:36 PM IST

சென்னை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது மொபைல் கட்டண உயர்வை அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஜூலை 3ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறதாம்.


ரிலையன்ஸ் ஜியோ தனது ப்ரீபெய்ட் கட்டணங்களை உயர்த்தியதைத் தொடர்ந்து ஏர்டெல்லும் தனது மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை 10 முதல் 21 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. மக்களவை தேர்தல் முடிந்த பிறகு  இந்திய டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என ஏற்கனவே தகவல் பரவி வந்தது. 


அதன்படி முதல் ஆளாக நேற்று ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்த நிலையில், இன்று ஏர்டெல் நிறுவனமும் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.


ஏர்டெல் ரீசார்ஜ் கட்டண விபரம்:




அதன்படி ஏர்டெல்லின் அடிப்படை ரீசார்ஜ் பேக் ஆன 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்கள் வேலிடிட்டி பேக் கட்டணம் ரூ.179 இல் இருந்து ரூ.199 என உயர்த்தப்பட்டுள்ளது.


தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகளில் 28 நாட்கள் வேலிடிட்டி பேக்குகளுக்கான கட்டணம் ரூ.265லிருந்து ரூ.299 என உயர்த்தப்பட்டுள்ளது. இது ப்ரீபெய்ட் பயனாளர்களுக்கான ரீசார்ஜ் கட்டண உயர்வாகும். இது மட்டும் இன்றி போஸ்ட் பெய்ட் பிளான் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.


ஜியோ ரீசார்ஜ் கட்டண விபரம்:


47 கோடி மொபைல் வாடிக்கையாளர்களை கொண்டு முதல் இடத்தில் இயங்கி வரும் ஜியோ நிறுவனம், அதன் ரீசார்ஜ் கட்டணத்தை 12 முதல் 27 சதவீதமாக உயர்த்தி உள்ளது. இந்த கட்டண உயர்வை இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அறிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.


அதன்படி, தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் 28 நாட்களுக்கான வேலிடிட்டி பேக் கொண்ட கட்டணம் ரூ.209லிருந்து ரூ.249 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தினசரி 2 ஜிபி டேட்டா கொண்ட பேக் ரூ.349 மற்றும் அதற்கும் மேலான தொகை கொண்ட பேக்குகளை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தான்  அன்லிமிடெட் 5ஜி நெட்வொர்க் சேவை வழங்கப்பட உள்ளதாக ஜியோ அறிவித்துள்ளது.


மொபைல் போன் சேவைகளுக்கான 10வது அலைக்கற்றை ஏலம் அண்மையில் நிறைவடைந்த நிலையில் ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ மற்றும் ஏர்டெல் உயர்த்தி உள்ளன. வரும் நாட்களில் வோடபோன் ஐடியா நிறுவனமும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.