சென்னையில்.. கிடுகிடுவென உயர்ந்த காற்று மாசு தர குறியீடு.. ஏன்?

Su.tha Arivalagan
Nov 13, 2023,01:04 PM IST
- மஞ்சுளா தேவி

சென்னை: தீபாவளியை ஒட்டி கட்டுப்பாடு இல்லாமல் பட்டாசுகளை வெடித்ததில் சென்னையில் காற்று மாசு அதிகரித்து, மாசு தரக் குறியீடு உயர்ந்து விட்டது.

தீபாவளி பண்டிகை நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது . குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகாலையில் ஆரம்பித்து இரவு வரை பட்டாசுகளை வெடித்து மக்கள் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். தமிழக அரசு அனுமதித்த நேரத்தை தாண்டியும் மக்கள் பட்டாசு வெடித்தால் காற்று மாசு தர குறியீடு உயர்ந்துள்ளது.

சென்னையில் பல இடங்களில் காற்றின் தரம் மோசமான நிலையை எட்டி உள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி காற்றின் தர குறியீடு 256 ஆக பதிவாகி உள்ளது என  தமிழக மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. இது மிகவும் மோசமான நிலை எனவும் குறிப்பிட்டுள்ளது. அதாவது, ஒருவர் ஒரு நாளைக்கு  10 முதல் 15 சிகரட்டை புகைப்பதற்கு சமம். இதனால் மூச்சு திணறல், கண் எரிச்சல் ,தொண்டை வலி , தொற்று வியாதிகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.



சென்னையில் குறிப்பாக மணலி, அரும்பாக்கம், வேளச்சேரி, ராயபுரம் போன்ற பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமாக நிலையை எட்டியுள்ளது. அதிகபட்சமாக மணலில் காற்றின் தர குறியீடு 322 ஆக பதிவாகியுள்ளது. இது மிகவும் அபாயகரமான அளவாகும்.

அரும்பாக்கத்தில் 256 ஆகவும், வேளச்சேரியில் 308 ஆகவும்,  ராயபுரத்தில் 232 ஆகவும் பதிவாகியுள்ளது. மேலும் காற்றில் பிஎம் அளவு2.5லிருந்து 10 ஆக உயர்ந்துள்ளது. மணலியில் தீபாவளி பட்டாசு வெடிப்பு காரணமாக, இப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனால் சுவாசிக்க ஏதுவான நிலையில் காற்று இல்லை. இன்று விடுமுறை என்பதால் இப்பகுதியில் உள்ள  கர்ப்பிணிகள்  ,முதியோர்கள், குழந்தைகள் வெளியே செல்ல வேண்டாம். அப்படி சென்றால் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

சென்னையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் காற்றின் தரம் மோசமான நிலையை விட, இந்த ஆண்டு மிக மோசம் என்ற நிலையை எட்டி உள்ளது. இதற்குக் காரணம் கட்டுப்பாடில்லாமல் பட்டாசுகளை வெடித்ததே.