போர் மேகம் சூழ்ந்த இஸ்ரேலுக்கு.. மறு உத்தரவு வரும் வரை.. விமானங்கள் ரத்து.. ஏர் இந்தியா அறிவிப்பு!

Su.tha Arivalagan
Aug 09, 2024,06:49 PM IST

டெல்லி: இஸ்ரேலுக்கும் - ஈரானுக்கும் இடையே போர் மூளும் சூழல் தொடர்நது நீடித்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு விமானங்கள் இயக்கப்படாது என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே பெரும் மோதல் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஈரானுக்கு வந்திருந்த ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொடூரமாக கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரான் கடும் ஆத்திரமடைந்துள்ளது. பலமுனைகளிலிருந்து இஸ்ரேலைத் தாக்க அது ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இதை எதிர்த்து முறியடிக்க இஸ்ரேலும் ஆயத்தமாகி வருகிறது. இதனால் போர் மூளும் அபாயம் அதிகரித்து வருகிறது. பதட்டமும் தணியவில்லை.




இந்த நிலையில், இஸ்ரேலுக்கு இயக்கி வரும் விமான சேவையை தற்காலிகமாக நிறுத்த ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டிருந்தது. தற்போது இதை காலவரையற்ற முடிவாக அது மாற்றியுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், மத்திய கிழக்கில் தற்போது நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு டெல் அவிவ் நகருக்கு இயக்கப்பட்டு வரும் எங்களது விமான சேவையை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்.


தொடர்ந்து நிலைமையைக் கவனித்து வருகிறோம். டெல் அவிவ் நகருக்கு டிக்கெட் புக் செய்திருந்த அனைத்துப் பயணிகளுக்கும் அவர்களது பயணக் கட்டணம் முழுமையாக திருப்பிச் செலுத்தப்பட்டு விடும்.எங்களது பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்களது பிரதான முக்கியமாக இருக்கும் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.