ஏர் இந்தியா விமானத்தில் அசிங்கம்.. பெண் மீது சிறுநீர் கழித்த நபருக்கு.. ஒரு மாத பயணத் தடை!
புதுடில்லி : ஏர்இந்தியா விமானத்தில் பயணம் செய்த பெண் பயணி மீது, குடி போதையில் இருந்த சக பயணி ஒருவர் சிறுநீர் கழித்ததற்காக அந்த போதை ஆசாமிக்கு 30 நாட்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 26 ம் தேதி நியூயார்க்கில் இருந்து டில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் பிசினஸ் கிளாஸ் பிரிவில் பயணம் செய்துள்ளார். இரவு உணவிற்கு பிறகு குறைவான வெளிச்சம் கொண்ட விளக்குகள் மட்டுமே எரிய விடப்பட்டுள்ளன. அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த போதை ஆசாமி, அந்த பெண் அமர்ந்திருந்த இருக்கைக்கு நேராக வந்து சிறுநீர் கழித்துள்ளார்.
மற்றொரு பயணி நகர சொல்லும் வரை அந்த நபர் அதே இடத்திலேயே நின்றுள்ளார். இச்சம்பவம் பற்றி விமான ஊழியர்களிடம் அந்த பெண் புகார் அளித்துள்ளார். தன்னுடைய உடை, ஷூ, பை என அனைத்தும் சிறுநீரால் நனைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் விமான ஊழியர்கள் அந்த பெண்ணிற்கு வேறு உடை, செருப்பு போன்றவற்றை மாற்றிக் கொடுத்து, வேறு இடம் காலியாக இல்லாததால் அதே இருக்கையில் மீண்டும் உட்காரச் சொல்லி உள்ளனர்.