ஜெயிக்க ஆரம்பிச்சுட்டோம்..  இனி ஜெட் வேகத்தில் செயல்படுவோம்.. எடப்பாடி பழனிச்சாமி அதிரடி பேச்சு!

Meenakshi
Dec 26, 2023,06:31 PM IST

சென்னை: தேர்தல் ஆணையம் அங்கீகரித்து விட்டது. கோர்ட்டுகளிலும் வெற்றி பெற்று விட்டது. இனி அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது.  இதில் 

23 பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


முதல் தீர்மானமாக, அதிமுக பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


அதைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:




மதுரையில் நடைபெற்ற அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு வெற்றி பெறுவதற்கு நன்றி.


வடகிழக்கு பருவமழையை ஒட்டி எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும், மிச்சாங் புயலை எதிர்கொள்ள முன்பே திட்டமிடாமலும், மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியதோடு எதிர்பார்த்த நிவாரண உதவிகளை வழங்காத திமுக அரசுக்கு கண்டனம்.


எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக மரபுகளை கடைபிடிக்காத பேரவை தலைவருக்கு கண்டனம். 


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வளர்க்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும்.


20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும்.


மீனவர்கள் நலனை பாதுகாக்க கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பொய்யான 520 வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்ற முடியாமல் மக்களை ஏமாற்றும் திமுக அரசுக்கு கண்டனம்.


சட்டம் ஒழுங்கு சீரழிவிற்கு காரணமான திமுக அரசின் மக்கள் விரோத போக்கிற்கு கண்டனம். 


ஈழ தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம்.


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் வகையில் தொண்டர்கள் களப்பணி ஆற்ற வேண்டும்.


தமிழகத்தில் மழை வெள்ள நிவாரணத்தொகை உயர்த்தி வழங்க வேண்டும்.


டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க தவறிய மக்கள் நல்வாழ்வுத்துறையை கண்டித்து தீர்மானம்.


நீட் விலக்கு விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றியதை கண்டித்து தீர்மானம்.


மக்களவையில் கடந்த டிச.,12ம் தேதி பாதுகாப்பு குறைப்பட்டால் நடந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.


ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.


அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரையாற்றினார்.




அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்:


திமுக அரசு அடுத்தடுத்து நம் மீது வழக்குகளாகத் தொடர்ந்தது. வக்காலத்துக்களாக கொண்டு வந்து கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். நானும் கையெழுத்தாக போட்டுக் கொண்டே இருப்பேன். எத்தனை கையெழுத்து என்று கணக்கே இல்லை. எத்தனை கையெழுத்துதான் போடுவது என்று நம்முடைய சிவி. சண்முகத்திடம் கேட்பேன். என்னண்ணா பண்றது, அவர்கள் வழக்குப் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள் என்பார்.


ஆனால் வழக்குகளில் நாம் தொடர்ந்து ஜெயித்துக் கொண்டே இருக்கிறோம். கோர்ட்டுகளில் நாம் ஜெயித்துக் கொண்டே இருக்கிறோம். தேர்தல் ஆணையமும் நம்மை அங்கீகரித்து விட்டது. முன்பெல்லாம் பொதுக்குழுக் கூட்டம் நடத்தினால் எல்லோரிடத்திலும் ஒரு விதமான இறுக்கமான மன நிலை இருக்கும். ஆனால் இன்று அத்தனை பேர் முகத்திலும் மலர்ச்சி இருக்கிறது. இனிமேல் அதிமுக ஜெட் வேகத்தில் செயல்படும்.


அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட அம்மா உணவகங்களை மூடிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்கிறார்கள். ஒருகாலத்தில் அம்மா உணவகங்கள்தான் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியது. 


தென் மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் டிசம்பர் 14ம் தேதியே வானிலை மையம் அறிவித்து விட்டது. ஆனால் இந்த அரசு தூங்கிக் கொண்டிருந்தது. முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்குமா.


இப்போதுள்ள முதல்வர் பொம்மை முதலமைச்சர். சாவி கொடுத்தால்தான் செயல்படுவார். நிர்வாக செயலற்ற, திறனற்ற அரசுதான் இப்போது இருக்கிறது. இதனால்தான் பரிதவிக்கின்ற சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் தண்ணீர் வடியவில்லை. கால்நடைகள் செத்து மிதக்கின்றன. 8 நாட்களாகியும் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை என்றார் எடப்பாடி பழனிச்சாமி.