"தலைவரே தலைவரே.. சில இலைகள் உதிரத்தான் செய்யும்".. பரபரப்பைக் கூட்டிய செல்லூர் ராஜு!

Su.tha Arivalagan
May 15, 2024,06:38 PM IST

மதுரை:  அதிமுகவில் பிளவு ஏற்படப் போவதாகவும், தேர்தல் முடிவுக்குப் பின்னர் அதிமுக உடையும் என்று பலவாறாக பேச்சு அடிபட்டு வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அதுகுறித்து சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.


ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையில் ஒரு கட்சியும், ஓ.பி.எஸ் தலைமையில் இன்னொரு பிரிவுமாக கட்சி பிளந்தது. அதன் பின்னர் சசிகலா ஜெயிலுக்குப் போனார்.. டிடிவி தினகரன் அமமுக என்ற கட்சியைத் தொடங்கினார்.. எடப்பாடி பழனிச்சாமியுடன் இணைந்தார் ஓபிஎஸ்.. அதிமுகவை ஓபிஎஸ்ஸும் - இபிஎஸ்ஸும் இணைந்து வழி நடத்தி வந்தனர்.




இந்த நிலையில் வருகிற லோக்சபா தேர்தல் முடிவுக்குப் பிறகு மீண்டும் அதிமுக உடையப் போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சிலர் கூறி வரும் தகவல்கள் பரபரப்பைக் கிளப்புவதாக உள்ளது. இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் செய்தியாளர்கள் கட்சியில் பிளவு ஏற்படப் போகுதாமே என்று கேட்டனர்.


அதைக் கேட்ட செல்லூர் ராஜு தனது கட்சிக்காரர்கள் பக்கம் திரும்பி என்னப்பா பிளவு இருக்கா.. ஏம்ப்பா பிளவு இருக்கா.. எல்லாரும் ஒற்றுமையாத்தானே இருக்கீங்க என்று கிண்டலாக கேட்டு விட்டு செய்தியாளருக்குப் பதில் அளித்தார். அவர் கூறுகையில், ஒன்னு ரெண்டு போ் போவாங்க தம்பி. இந்த மரத்துல ஆலமரத்துல, வெயில் காலத்துல சில இலைகள் உதிரும். பாத்திருக்கீங்களா.. கேள்வி கேட்ட தலைவரே.. பாத்திருக்கியா.. ஆனா திரும்ப தளிர்த்து விடும்.


இந்த இயக்கத்துல சில பேர் போவாங்க.. பல பேர் வருவாங்க. இது பீனிக்ஸ் பறவை போல. அழிவது போல தெரியும். ஆனால் வீறு கொண்டெழும். அதுதான் அதிமுக என்று பதிலளித்தார்.