அந்த சீட்டு இந்த சீட்டு கேக்கல.. யாரையும் மாத்தவும் சொல்லல..  எடப்பாடி பழனிச்சாமி

Meenakshi
Oct 04, 2023,03:49 PM IST

சென்னை: நாங்க யாரிடமும் அந்த சீட்டு இந்த சீட்டு எதுவும் கேக்கல, பாரதிய ஜனதா தலைவரையும் மாற்றவும் சொல்லல்ல. எந்த கோரிக்கையும் வைக்கல என்று அதிமுக பொதுச்செயலாளர் எப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


அதிமுக -பாஜக முறிவு  தொடர்பான விவாதங்கள் இன்னும் நீண்டு கொண்டே இருக்கின்றன. தொடர்ந்து ஐயங்களும் எழுப்பப்படுகின்றன.  காரணம் அதிமுக - பாஜக இடையே ரகசியமாக பேச்சுகள் நடந்து வருவதாக வெளியாகும் தகவல்களால். மேலும் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை 3 அதிமுக எம்எல்ஏக்கள் சந்தித்தும் பேசினர். இது மேலும் பரபரப்பையும், குழப்பத்தையும் கூட்டியது.




இந்த நிலையில் செய்தியாளர்களிடம் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அப்போது அவர் கூறுகையில்,  பாஜகவில இருந்து அந்த சீட்டு வேணும் இந்த சீட்டு வேணும் 15 சீட்டு 20 சீட்டு என்று எதுவும் கேட்கல. பாரதிய ஜனதா மாநில தலைவரை  மாற்றவும் சொல்லவில்லை நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.


பாரதிய ஜனதா கட்சியில் மத்தியில் இருக்கின்ற தலைவர்  யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. இங்கே நடத்த நிகழ்வுகள் தொண்டர்களின் மனதை காயப்படுத்தி விட்டது. ஒரு கட்சி வளமாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் தொண்டர்கள் உழைக்க வேண்டும். தொண்டர்கள் உழைத்தால் தான் கட்சி வெற்றி பெறும். தலைவர்களை வைத்து கொண்டு கட்சி நடத்த முடியாது. தொண்டர்களின் உணர்வுளை மதிக்கின்ற அளவிற்கு தான்  நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.


அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பார்த்ததில் பெரிதாக எதுவும் இல்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினராக தொகுதிப் பிரச்சினைகள் தொடர்பாக அவரகள் தங்களது கடமையைச் செய்துள்ளனர்.


நாடாளுமன்றத்திலே அண்ணா திமுக தலைமையிலே மிக பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறும். 2026 சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக நல்ல கூட்டணி அமைத்து வெற்றி பெற்று மக்களுக்கு தேவையான திட்டங்களை அளிக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றேன் என்றார் எடப்பாடி பழனிச்சாமி.