பாஜகவுக்கு எத்தனை சீட் என்பதை நாங்கதான் முடிவு செய்வோம்.. ஜெயக்குமார் பன்ச்!

Su.tha Arivalagan
Apr 03, 2023,10:15 AM IST
சென்னை: அதிமுக கூட்டணியில்இடம் பெறும் கட்சிகளுக்கு, பாஜக உள்பட, அனைவருக்குமே எத்தனை சீட் தர வேண்டும் என்பதை அதிமுகதான் முடிவு செய்யும் என்று முன்னாள் அமைச்சரும்  அதிமுகவின் ஒருங்கிணைப்பு செயலாளருமான ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பாஜக 25 தொகுதிகளை குறி வைத்து தமிழ்நாட்டில் களப் பணியாற்றி வருவதாக அண்ணாமலை கூறி வருகிறார். நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எல். முருகன் பேசும்போது, தமிழ்நாட்டில் 9 தொகுதிகளை பாஜக மனதில் கொண்டு பணியாற்றி வருவதாக கூறியிருந்தார். இதனால் தமிழ்நாட்டில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பதை பாஜக ஏற்கனவே தீர்மானித்து விட்டதா என்ற கேள்வி எழுந்தது. 



இந்த நிலையில் நேற்று ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்குவது அதிமுகதான்.  அதிமுகதான் யாருக்கு எத்தனை சீட் வழங்குவது என்பதை முடிவு செய்யும். தேர்தல் சமயத்தில்தான் இது நடைபெறும். இப்போது இல்லை.

தங்களுக்கு எத்தனை தொகுதிகள் தேவை.. எந்தெந்த இடங்களில் போட்டியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து கூட்டணிக் கட்சிகள் கூறுவதும், பேசுவதும் இயல்புதான். ஆனால் கூட்டணித் தலைமைதான் யாருக்கு எத்தனை சீட் என்பதை முடிவு செய்யும்.

9 சீட், 25 சீட் என்று பாஜக தலைவர்கள் பேசி வருவது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களது உட்கட்சிப் பி��ச்சினை .  அதில் நாங்கள் தலையிட முடியாது என்றார் ஜெயக்குமார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க அண்ணாமலை விரும்பவில்லை. ஆனால் கட்சித் தலைமை, அதிமுகவுடன் கூட்டணியை தொடர ஆர்வமாக உள்ளது. இந்தக் குழப்பங்களுக்கு மத்தியில்தான் ஆளுக்கு ஒரு சீட் கணக்கை கூறி வருகின்றனர். இதனால் பாஜக எத்தனை சீட்களில் போட்டியிடும் என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அதேசமயம், பாஜகவின் விருப்பத்திற்கு அதிமுக வளைந்து தருமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.