"33%".. பெண் இனத்துக்கே பெருமை சேர்த்தவர் எங்கள் அம்மா.. எடப்பாடியார் பெருமிதம்!

Su.tha Arivalagan
Sep 20, 2023,02:26 PM IST
சென்னை: பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் மறைந்த ஜெயலலிதாதான். அவர்தான் உள்ளாட்சிப் பதவிகளில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தியவர் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதாவை கிட்டத்தட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகளும் வரவேற்றுள்ளன. காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கட்சிகள் இதை வரவேற்றுள்ளன.



அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுதொடர்பாக போட்டுள்ள ட்வீட்டில் கூறியிருப்பதாவது:

"பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடும் பின்னர் அதையே 2016ல்  50% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் தான்,

அதேபோல் 1991ல் முதன்முதலாக ஆட்சி அமைத்த போதுதான் 31பெண்‌ சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மா அவர்களுடன் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர், மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அஇஅதிமுக மட்டும் தான் என்பதில் பெருமை கொள்வதோடு, அதனை முன்மாதிரியாக கொண்டு நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.