ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?.. ஓபிஎஸ்ஸுக்கு கதவை மூடினார் எடப்பாடி பழனிச்சாமி!

Su.tha Arivalagan
Feb 23, 2025,01:24 PM IST

சென்னை: அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்குப் பதில் அளிக்கும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. அதில், ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா. பயிர்களும் களைகளும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா. விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா.. முடியாது என்று அவர் கூறியுள்ளார்.


அதிமுக ஒன்றுபட வேண்டும் என்ற கோரிக்கையை ஓபிஎஸ் வைத்து வருகிறார். அதேபோல டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரும் இதே கோரிக்கையுடன் வலம் வருகின்றனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினசரி அறிக்கை மற்றும் விமர்சனங்களையும் அவர்கள் வைத்து வருகின்றனர்.


இந்த நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி கட்சித் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் ஒன்றை வரைந்துள்ளார். அதில் அதிமுக ஒற்றுமை சாத்தியமில்லை என்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டி பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள கடித விவரம்:




நம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடும் இந்த வேளையில் அம்மா அவர்களின் புகழ் ஓங்குக என்ற வாழ்த்தொலி நம் உள்ளத்திலும் இல்லத்திலும் எதிரொலிக்கிறது. பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையிலும் எல்லா நேரத்திலும் தாயாகவும் சகோதரியாகவும் உற்ற தோழமை கொண்டும் தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இமயம் போல் உயர்ந்து விளங்கிய புரட்சித்தலைவி ஜெயலலிதாவை ஒரு நாளின் ஒவ்வொரு நிகழ்விலும் நகர்விலும் தமிழ்நாட்டு மக்கள் நினைத்து பார்க்கின்றார்கள்.


பெண் கல்வி, பெண் விடுதலை, பெண்களுக்கு சம உரிமை, பெண்களின் பாதுகாப்பு , பெண்களுக்கான சமூக பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் தனி கவனம் செலுத்திய ஜெயலலிதா பெண்களுக்காகவும் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் கொண்டு வந்த அற்புதமான திட்டங்களை எல்லாம் இந்த அரசு சீர்குலைத்து விட்டது. இன்றைக்கு திமுக அரசு இரு மொழிக் கொள்கை காப்பாற்ற கூட திறனற்றதாக உள்ளது. மிகப்பெரிய எண்ணிக்கையில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்களைக் கொண்டதாக இருந்தாலும் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்பாற்றுவதற்கு திறனற்ற அரசாக இருந்து கொண்டிருக்கிறது.


பொழுது விடிந்து பொழுது போனால் தமிழ்நாடு முழுவதும் பெண் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் ஏன் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கும் கூட பாதுகாப்பற்ற நிலையும் பாலியல் வன்கொடுமைகளும் அரங்கேறிய வண்ணம் உள்ளன. நான்கு திசைகளிலும் தினந்தோறும் கள்ளச்சாராயம் போதை பொருள் பழக்கம், வெட்டு குத்து, கொலை என்று சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. உண்மைகளை எடுத்துச் சொல்வோருக்கு வாய் போட்டு போடப்படுகிறது. இந்த அவலங்களை எல்லாம் மாற்ற வேண்டும், தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ வேண்டும், தமிழ்நாடு பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ வழிவகை செய்ய மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைய வேண்டும்.


இன்றைக்கு நம்முடைய கழகம் கொள்கை வீரர்களின் கூடாரமாக திகழ்கிறது. பதவிக்காகவும் பணம் சேர்ப்பதற்காகவும் கழகத்தை காட்டிக் கொடுக்க தயாராகி இருந்த திரை மறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும் கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. ஓநாயும் வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா, களைகளும பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாம ஆகுமா, விசுவாசியும் துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா.. முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம். இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த வெற்றி முழக்கத்தை கொள்கை பிரகடனத்தை செயல்படுத்திட நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டிய நாள்தான் ஜெயலலிதாவின் பிறந்தநாள்.


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் சிறப்பு மிக்க வெற்றி கூட்டணி அமையப்போகிறது. வியக்கத்தக்க வெற்றிகளை நாம் பெறப் போகிறோம். அதற்கு ஏற்ப அயராது உழைப்போம். ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களாக பணியாற்றுவோம் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன் . நமது சக்தியை நாளைய சரித்திரம் சொல்லும், இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று அவர் கூறியுள்ளார்.