எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்.. சென்னையில் நாளை அதிமுக செயலாளர்கள் கூட்டம்!

Meenakshi
Nov 20, 2023,03:00 PM IST

சென்னை: சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.


சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலக  அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம்  வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளின் களப்பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். 



முன்னர் அறிவித்தபடி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நாளை நவம்பர் 21 ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கூட்டத்தில் வேறு ஏதேனும் முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் கூட விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. தற்போது அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து அதிமுகவின் அனைத்து அடையாளங்களையும் சட்ட ரீதியாக பிடுங்கி விட்ட நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனராம்.