கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியில்லை.. ஓபிஎஸ் வழியில் எடப்பாடியும் பல்டி!

Aadmika
Apr 24, 2023,04:14 PM IST
சென்னை : கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிமுக போட்டியிட போவதில்லை என அதிமுக கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

கர்நாடக சட்டசபை தேர்தல் மே 10 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 13 ம் தேதி துவங்கி, ஏப்ரல் 20 வரை நடைபெற்றது. இதில் அதிமுக.,வின் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் டி.அன்பரசனும், ஓபிஎஸ் அணி சார்பில் இரண்டு தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்தனர். 

தமிழக அரசியலை தாண்டி கர்நாடக அரசியலிலும் அதிமுக விவகாரம் பரபரப்பை கிளப்பியது. இதற்கிடையில் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு அறிவித்த வேட்பாளரின் வேட்புமனுவை அதிமுக கட்சி வேட்பாளரின் வேட்புமனுவாக கர்நாடக தேர்தல் கமிஷன் ஏற்றது. இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமி சார்பில் கர்நாடக தேர்தல் கமிஷனுக்கு புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விளக்கம் அளிக்கும் படி ஓபிஎஸ் தரப்பு வேட்பாளுருக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.



விளக்கம் அளிக்க ஓபிஎஸ் தரப்பிற்கு அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்றுக் கொள்ள கூடியதாக இல்லை என்றால் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் மீது கர்நாடக தேர்தல் கமிஷன் சட்டச நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. அடுத்து என்ன நடக்கும் என அனைவரும் ஆவலாக பார்த்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராத விதமாக ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இரண்டு வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வேட்பாளர் அன்பரசன் மட்டுமே அதிமுக வேட்பாளர் என முடிவானது.

இதற்கிடையில் மற்றொரு ட்விஸ்டாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அன்பரசனும் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். பாஜக மேலிடம் தலைவர்கள், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமியை போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். இதனால் கர்நாடக சட்டசபை தேர்தலில் இருந்து விலக அதிமுக முடிவு செய்தது. இதனையடுத்து அதிமுக சார்பில் கர்நாடக சட்டசபை தேர்தலில் யாரும் போட்டியிடவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.