2 பாஜக எம்எல்ஏக்கள்.. அதிமுகவில் இணைகிறார்களா?.. சூட்டைக் கிளப்பிய "அம்மன்".. தகிக்கும் கொங்கு!!

Manjula Devi
Feb 27, 2024,01:04 PM IST

சென்னை: "இன்று மதியம் 2:15 மணி மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் இரண்டு பேர் அதிமுகவில் சேருகிறார்கள்.. அப்ப தெரியும்" என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார் அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜுனன். 


லோக்சபா தேர்தல் தேதியை அறிவிக்க இன்னும் ஒரு சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் பல்வேறு அரசியல் கட்சிகள்  தேர்தல் குழு, பிரச்சார குழு, விளம்பரக் குழு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் பணிகள் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.


ஒரு பக்கம் இந்திய தேர்தல் ஆணையமும் லோக்சபா தேர்தலுக்காக தீவிர முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. மறுபக்கம் கட்சி தாவல்கள், கூட்டணி முடிவுகள், குழப்பங்கள் என அரசியல் களமும் சூடாக பிசியாக இருக்கிறது. இந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மதுரையில் சிறு, குறு தொழில் முனைவோருக்கான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் உள்ளார்.


அம்மன் அர்ஜூனன் கிளப்பிய பரபரப்பு




இந்தப் பின்னணியில் அதிமுக எம்எல்ஏவான அம்மன் அர்ஜூனன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பரபரப்பான பேட்டி கொடுத்தா். அவர் கூறுகையில், அதிமுகவிலிருந்து முக்கியப் புள்ளிகள் பாஜகவுக்கு வரப் போவதாக கூறுகிறார்கள். அவர்கள் ஆள் பிடிக்கிறார்கள். நான் இங்கே ராஜாவாக இருக்கிறேன்.. நான் போய் ஏன் அங்கு சேர்ந்து அவர்களுக்கு கூஜா தூக்க வேண்டும். இதை வட மாநிலமாக நினைத்துக் கொண்டுள்ளனர். இது தென் மாநிலம். அதிமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது.


நான் சொல்கிறேன், இன்று 2: 15 மணிக்கு 2 பாஜக எம்எல்ஏக்கள், சேலத்தில் எடப்பாடியாரைப் பார்த்த அதிமுகவில் சேரப் போறாங்க. அப்ப தெரியும். கொங்கு மண்டலத்தில் ஒரு தொகுதியில் அவர்கள் ஜெயித்து விடட்டும். நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.


ஏன் இந்த சவால்?


அதிமுகவின் முக்கிய புள்ளிகள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக நேற்று முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பு மாலை 5 மணி அளவில் வெளியாகும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். இதனால் நேற்று முழுவதும் சோசியல்  மீடியாவில் அதிமுக மற்றும் பாஜக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பரபரப்பு நிலவி வந்தது. 


யார் தாவப் போகிறார்கள், அவரா இவரா என்று புகைப்படத்துடன் கடும் வாதம் மூண்டிருந்தது. ஆனால் கடைசி வரை யாரும் வரவும் இல்லை, அப்படி யாரும் சேர்ந்ததாக பாஜகவும் அறிவிக்கவில்லை.  இதையடுத்து பாஜகவை கிண்டலடித்து அதிமுகவினர் டிவீட் போட்டுக் கொண்டிருந்தனர்.


இந்த நிலையில்தான் அதிமுக தரப்பில் இப்படி ஒரு பரபரப்பு இன்று கிளம்பியுள்ளது. நேற்று புஸ்வாணம் ஆனது போல இன்றைய அறிவிப்பும் புஸ்வாணமாகுமா அல்லது உண்மையிலேயே யாராவது சேருவார்களா என்பதை அறிய 2.15 மணி வரை காத்திருக்க வேண்டும்.