அதிமுக சார்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்படதது ஏன்.. தொண்டர்கள் அதிருப்தி!

Su.tha Arivalagan
Jan 14, 2023,11:17 AM IST
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் பொங்கல் கொண்டாட்டத்தை அதிகாரப்பூர்வமாக செய்துள்ள நிலையில், அதிமுக மட்டும் அதை செய்யாமல் தவிர்த்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.



உலகெங்கும் உள்ள தமிழ் மக்களின் தனிப்பெரும் திருவிழா பொங்கல் பண்டிகை. போகி, தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல் என 3 நாட்கள் இதை தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள். தமிழ்நாட்டில் இது வருடப் பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது.

வழக்கமாக ஒவ்வொரு அரசியல் கட்சி சார்பிலும், பெரிய பெரிய இயக்கங்கள் சார்பிலும், அமைப்புகள் சார்பிலும் பொங்கல் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், திமுக சார்பில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்ட பொங்கல் விழா நடைபெற்றது. அதேபோல பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இடங்களில் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. அவற்றில் அண்ணாமலை கலந்து கொண்டுள்ளார்.

தேமுதிக சார்பிலும் கோவையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். ஆனால் தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் அக்கட்சியின் தலைமை சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த பொங்கல் விழாவும் நடைபெறவில்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பிலும் சரி, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பிலும் சரி அதிகாரப்பூர்வமாக பொங்கல் விழா கொண்டாடப்படவில்லை. ஆங்காங்கே அதிமுக பிரமுகர்கள் அப்பகுதி சார்பில் நடந்த  விழாக்களில் கலந்து கொண்டிருக்கலாம், அவ்வளவுதான். கட்சி தலைமை சார்பில் எந்த இடத்திலும் பொங்கல் விழா கொண்டாடப்படவில்லை.

ஆளுநர் ஆர். என். ரவி ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் எடப்பாடியும், ஓ.பி.எஸ்ஸும் அத்தனை உற்சாகமாக கலந்து கொண்டனர். பீகாரைச் சேர்ந்தவரான ஆளுநரே பெரும் உற்சாகத்துடன் வேட்டி சட்டை அணிந்து பொங்கலைக் கொண்டாடும் நிலையில் தமிழ்ப் பெருங்குடிகளான எடப்பாடி பழனிச்சாமியும், 
ஓ.பன்னீர்செல்வமும் எப்படி பொங்கலை மறந்தார்கள் என்ற பெரும் கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. பொங்கல் கூட கொண்டாடாத அதிமுகவை நினைத்தால் வெட்கக் கேடாக உள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அதேசமயம்,அதிமுக தொண்டர்களும் இதுதொடர்பாக பெரும் விரக்தி அடைந்துள்ளனர். அதிமுக தலைமைதான் இதற்கு விளக்கம் தர வேண்டும்.