வெறும் பொங்கல் தொகுப்பு போதுமா.. 1000 ரூபாயும் சேர்த்துக் கொடுங்க.. எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Jan 04, 2024,04:21 PM IST

சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் தொகுப்பை மட்டும் திமுக அரசு அறிவித்துள்ளது. இது போதாது. கூடவே ரூ. 1000 பணமும் தர வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.


பொங்கல் பண்டிகையையொட்டி தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பொங்கல் தொகுப்புடன் பணமும் தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பொங்கல் தொகுப்புடன் ரூ. 3000 பணம் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் பணம் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


இந்த நிலையில் தற்போது முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் ரொக்கம் தர வேண்டும் என்று கோரியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை முன்னிட்டு வழங்கப்படும், 2024-பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் பற்றி அறிவிக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 




இந்த ஆண்டு பொங்கல் திருநாளுக்கு, பொங்கல் தொகுப்பை மட்டும்  அரசு அறிவித்துள்ளது. எனவே, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 1,000/-ஐ வழங்க வேண்டும் என்றும்; மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் வசிக்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், எண்ணூர் முகத்துவாரத்தில் பரவிய கச்சா எண்ணெய் படலத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கும் பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணமாக ரூ. 5,000/- வழங்க வேண்டும் என்றும், 


மேலும், இந்த ஆண்டு பொங்கல் பரிசாக வழங்கப்படும் கரும்பு கொள்முதலில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் இடம் தராமல், நேரடியாக கரும்பு சாகுபடி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என்றும், கரும்புக்கான பணம் இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளைச் சென்றடைய வேண்டும் என்றும் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.