"ஜெயிக்க வச்சுரு சென்றாயா"... கண்களை மூடி பெருமாளை உருக்கமாக வணங்கிய எடப்பாடி பழனிச்சாமி

Su.tha Arivalagan
Mar 24, 2024,05:01 PM IST

சேலம்:  அதிமுக கூட்டணியின் வெற்றிக்காக, சேலம் பெரிய சோர்கை சென்றாயப் பெருமாள் கோவிலுக்குச் சென்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மனமுருக வேண்டி வழிபட்டார்.


அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை முழுமையாக அறிவித்துவிட்ட அதிமுக தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.


அதற்கு முன்னதாக சேலம் அருகே உள்ள பெரிய சோர்கையில் உள்ள சென்றாய பெருமாள் கோவிலுக்கு இன்று காலை அவர் வருகை புரிந்தார். அங்கு அவர் பயபக்தியுடன் மனம் உருக பெருமாளை வணங்கி வழிபட்டார். சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. இந்த கோயில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மிகவும் ராசியானது. சென்டிமென்ட்டாக முக்கியமானது. எந்த காரியத்தில் ஈடுபடுவதாக இருந்தாலும் இந்த கோவிலுக்கு வந்து சாமி கும்பிட்டு விட்டு தான் அவர் அதில் ஈடுபடுவது வழக்கம். 




அந்த வகையில் இந்த தேர்தலிலும் வெற்றி பெறும் முஸ்திபுகளை காட்டி வரும் எடப்பாடி பழனிச்சாமி சென்றாய பெருமாள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு தனது பிரச்சாரத்தையும் ஆரம்பித்துவிட்டார். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வந்த அவர் வேனில் இருந்தபடி பிரச்சாரம் செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், சேலம் - பெரிய சோரகையில் அருள்மிகு சென்றாய பெருமாள் சுவாமி அருளுடன், "சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தை" தொடங்கியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பும், பேராதரவும் அளித்த பொதுமக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


இன்று திருச்சியில் அவர் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் கலந்து கொண்டு தனது பிரச்சாரத்தை முறைப்படி தொடங்குகிறார். இதற்காக வண்ணாங்ககோவில் நாவலூர் குட்டப்பட்டு பகுதியில் பிரம்மாண்ட பொதுக்கூட்ட மேடை போடப்பட்டுள்ளது. அங்கு கூட்டணி கட்சி வேட்பாளர்கள், தலைவர்கள் உள்ளிட்டோரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.