எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் - சுப்ரீம் கோர்ட்

Su.tha Arivalagan
Feb 23, 2023,10:11 AM IST
டெல்லி: அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இன்று சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, சஞ்யய் குமார் பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.  



கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்குழுவுக்கு முன்பாகவே எடப்பாடி பழனிச்சாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் தொடங்கி விட்டது. இதனால் பொதுக்குழுக் கூட்டத்தில் பிரச்சினை வெடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதுபோலவே பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  மேலும் கட்சி விரோத நடவடிக்கை காரணமாக பின்னர் ஓ.பன்னீர்செல்வமும் கட்சியை விட்டு நீக்கப்பட்டார். கழக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதாகவும் அதிமுக அறிவித்தது.

இதை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியது. அதில் பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என்று உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்தார்.  இதை எதிர்த்து அப்பீல் செய்தது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு. அதில் பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று தீர்ப்பு வந்தது. இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டை நாடினார். அங்கு இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் சின்னம் தொடர்பான சிக்கல் எழுந்தது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட், பொதுக்குழுக் கூட்டத்தில் வேட்பாளரை இறுதி செய்யுமாறு உத்தரவிட்டிருந்தது. அதன்படி பொதுக்குழுவில் எடப்பாடி தரப்பு வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு அதிகம் இருந்ததால் அவர் அதிகாரப்பூர்வமான வேட்பாளராக நிறுத்தப்பட்டு இரட்டை இலையில் போட்டியிட்டார். 

இந்நிலையில் இன்று, அதிமுக பொதுக்குழு செல்லும். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என தீர்ப்பு வழங்கியதுடன், ஐகோர்ட் இரு நீதிபதிகள் பெஞ்ச் வழங்கி தீர்ப்பு செல்லும் என சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. அதோடு அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களையும் சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. 

இன்று வெளியாகி உள்ள சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் அடுத்தடுத்த நகர்வுகள் எப்படி இருக்கும் என்ற ஆர்வம் அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.