சேலம் மாநாட்டில்.. காலில் மிதிபட்டது.. உதயநிதி வாங்கிய.. நீட் கையெழுத்து.. எடப்பாடி பழனிச்சாமி சாடல்

Manjula Devi
Feb 06, 2024,10:58 AM IST

சென்னை:  விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியம்  இருப்பதாகவும், அந்த ரகசியத்தை இதுவரை சொல்லவில்லை எனவும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக் கூட்டத்தில் கிண்டலாக பேசியுள்ளார்.


லோக்சபா தேர்தல்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும், ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வேட்பாளர் குழுக்களை நியமித்து வருகின்றனர்.


இந்நிலையில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் தர்மபுரியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் கூறியதாவது:




முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நான் முதலமைச்சராக பொறுப்பேற்றேன். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு க ஸ்டாலின் எங்களை மிகவும் ஏளனமாக விமர்சனம் செய்தார். எங்கள் ஆட்சி ஒரு மாதம் காலம் கூட தாக்கு பிடிக்காது என கிண்டலடித்தார்.


ஆனால் மக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆகியோரின் ஆதரவில் நான்கு வருடம் மற்றும் இரண்டு மாதம் சிறப்பான ஆட்சியை நடத்தியது  அதிமுக அரசு. தற்போது நாங்கள் தமிழகத்தில் எங்கு சென்றாலும் அதிமுகவின் ஆட்சி பொற்காலமான  ஆட்சி என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்படுத்தி வந்தோம்.


இன்றைக்கு விளையாட்டு துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்வதற்காக ரகசியம் எங்களிடம் உள்ளது என்று சொன்னார்.  ஆனால் இதுவரை அந்த ரகசியத்தை அவர் சொல்லவில்லை. பின்னர் ஒரே ஒரு கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவித்து, இதற்காக பல லட்சம் கையெழுத்துக்களை மக்களிடமிருந்து பெற்றார். இந்த கையெழுத்துக்களை சரியான முறையில் பயன்படுத்தினாரா என்றால் அதுவும் இல்லை. 


சமீபத்தில் சேலத்தில் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு தரப்பினரிடமிருந்து நீட் தேர்வு ரத்து செய்வதற்காக வாங்கப்பட்ட கையெழுத்துகள் எல்லாம் கீழே கிடந்தது. ஒரு குப்பை போல கையெழுத்துக்கள் அனைத்தும் காலில் மிதி பட்டதை நாங்கள் கவனித்தோம். இதுதான் நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியமா என்று சாடினார் எடப்பாடி பழனிச்சாமி.