ரோட்டில் குப்பையைக் கொட்டப் போறீங்களா.. ஒரு நிமிஷம் இருங்க.. AI கேமரா கண்டுபிடிச்சுரும்.. கவனம்!

Meenakshi
Oct 24, 2024,01:53 PM IST

சென்னை: பொது இடங்களில் குப்பை கொட்டும் நபர்களைக் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.


சென்னையில் பொது இடங்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், சாலைகள் முழுவதிலும் குப்பைகள் பரவி, தொற்று நோய்களை உருவாக்கி வருகின்றன. சென்னையில் சில இடங்களில் நீண்ட நாட்களாக தேங்கிக் கிடக்கும் குப்பைகள் பேருந்து வழித்தட சாலைகளிலும் நடைபாதைகளிலும் கிடப்பதால் போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுகிறது. அதோடு, துர்நாற்றமும் வீசுவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவதை ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




இதன் மூலம் கண்காணித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார். இதற்காக சென்னை  மாநகராட்சி நிர்வாகம் ஜிசிசி ஸ்பாட் பைன் வசூலிப்பதற்காக ஐஒபி யிலிருந்து 468 சாதனங்களைப் பெற்றுள்ளது. இதில் 70 ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு உள்ளது. இது செயல்படுத்தப்பட்ட சில நாட்களில் 289 பேர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த அபராதமுறை, வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.


எதற்கெல்லாம் அபராதம் தெரியுமா?


விதிகளை மீறி குடியிருப்பாளர்கள் கொட்டு குப்பைகளுக்கு ஸ்பாட் பைன் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாலைகளில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் விதிக்கப்பட உள்ளது. 


மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இதன் மூலம் சொத்து  வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


இந்த ஸ்பாட் பைனை யூபிஐ, டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராஃப்டுகள், காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 10 நாட்களில் விதிகளை மீறி குப்பைகளை கொட்டியவர்களிடம் இருந்து ரூ.17.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக ஆணையர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்