நாங்களும் விவசாயி.. டிராக்டர் ஓட்டி, நாற்று நட்டு, கவாத்து செய்து.. மாணவ, மாணவியரின் பண்ணை சுற்றுலா

Manjula Devi
Jul 19, 2024,11:38 AM IST

சிவகங்கை:   தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகப் பள்ளி மாணவர்கள், தமிழக அரசின் பண்ணை சுற்றுலா திட்டத்தின் மூலம் முதல் முறையாக தோட்டக்கலை துறை பண்ணை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விவசாய முறைகள் கற்றுத் தரப்பட்டன.


பண்டைய காலத்தில் மக்கள் விவசாயம் என்ற ஒன்றை நம்பியே வாழ்ந்து வந்தனர். மனிதனின் முதல் தொழிலே உழவுதான். அவர்களின் வாழ்க்கை தேவைக்கு ஆதாரமே விவசாயம் தான். அதனால் அப்போது தந்தை படும் கஷ்டமும், அவர்கள் விவசாயத்திற்காக என்னென்ன பணிகளை மேற்கொள்கிறார்கள் என்பது குறித்தும் பிள்ளைகள் தெரிந்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள நாகரீக காலத்தில் விவசாயம் என்பது என்ன அதனை எப்படி செய்ய வேண்டும்  என்று கேட்டால் ஒன்றுமே தெரியவில்லை. 




குறிப்பாக நாட்டு விதைகள், ஹைபிரிட் விதைகள் என்பது  குறித்த எந்த விழிப்புணர்வும் மாணவர்களுக்கு கிடையாது. ஏனெனில் தற்போது உள்ள காலகட்டத்தில் தொழில்நுட்பம், தகவல் நுண்ணறிவு, போலீஸ், கலெக்டர், ஆபீஸ் ஸ்டாப், போன்ற பணிகளையே சிறந்ததாக கருதி அதிலேயே பணிபுரிய ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் விவசாயம் கற்பதில் இருக்கும் ஆர்வம் மாணவர்களிடையே குறைந்துள்ளது. 


இதனால் தான் தமிழக அரசு மாணவர்களுக்கு தோட்டக்கலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பண்ணை சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த வகையில் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவ மாணவிகளை முதன் முறையாக தோட்டக்கலை துறை பண்ணை சுற்றுலாவுக்கு தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமையில் மாணவ மாணவியரை, களப்பயணம் அழைத்து சென்றனர்.




இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர், ஆசிரியை முத்துலட்சுமி, முத்துமீனாள் ஆகியோர் செய்திருந்தனர். தேவகோட்டை அரசு தோட்ட கலைப்பண்ணை அலுவலர்கள் ராம் பிரசாத், எழில் ஆகியோர் மாணவர்களை வரவேற்றனர். இதன் பின்னர் செடிகளைப் பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. குழித்தட்டு நாற்றங்கால் உற்பத்தி செய்வது எப்படி.. விண் பதியமிடுதல்.. மண் பதியம் இடுதல்.. டிராக்டர் எவ்வாறு ஓட்டுவது.. தேனீ வளர்ப்பு .. காவாத்து செய்தல்.. ஹைபிரிட் செய்தல் ‌..என ஒவ்வொன்றையும் மாணவர்களுக்கு நேரடி செயல் மூலம் தோட்டக்கலை பண்ணை அலுவலர்கள் விளக்கம் கொடுத்தனர்.


பின்னர் ஒரு மாங்கொட்டை பதியமிட்டால் வளர்வதற்கு எத்தனை வருடங்கள் ஆகும் என மாணவர்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதன் பின்னர் ஒட்டுக்கன்று என்றால் மூன்று வருடம் மட்டுமே போதும். நாட்டு மரம் என்றால் ஐந்து வருடங்கள் வரை ஆகும். அதேபோல் மாம்பழங்களில் என்னென்ன ரகங்கள் உள்ளன எனவும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்தனர். 




இந்த நிகழ்வு முடிவில் தோட்டக்கலை செடி பண்ணை சார்பில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் புங்கை செடி வழங்கப்பட்டது.. விவசாயம் அறிவோம், மரம் வளர்ப்போம்.. மழை மற்றும் மண் வளம் காப்போம்.