ஆரம்பிச்சிருச்சு ரியல் ஆட்டம்.. இன்று முதல் அக்னி நட்சத்திரம்..  சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

Meenakshi
May 04, 2024,12:55 PM IST

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் ஆரம்பமாகி உள்ளது. பொதுவாக  அக்னி நட்சத்திர நாட்களில் வெயில் மண்டையை பிளக்கும் அளவிற்கு அதிகமாக இருக்கும் என்று கூறுவர். அந்த நாட்களில் தான் வெயிலின் கொடுமையும் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னரே வெயில் அதிகமாக வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கத்திரி வெயில் இன்று முதல் வரும் 29ம் தேதி வரை தமிழகத்தை வாட்டி வதைக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.


தற்போது அடிக்கும் வெயில் தாக்கத்தை  விட இன்னும் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக அடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர நாளான இன்று காலை 7 மணி முதல் அக்னி பகவான் தனது உக்கிரத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டார். இனி வரும் அக்கினி நட்சத்திர நாட்களை எண்ணி பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். வெயில் அதிகம் வெளுக்கும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.




அக்னி நட்சத்திர நாட்களில் ஒரு சில இடங்களில் கோடை மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், கோடை மழையை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் தலா 1 செ.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. 


அடுத்த 5 நாட்களுக்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும். இதேபோல, மே 7ம் தேதி நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.