முதல்ல ரயில் என்ஜின் "சுட்டாங்க".. அப்புறம் பாலத்தை.. இப்ப ஒரு குளத்தையே "ஏவ்".. யார்ரா நீங்கல்லாம்!

Su.tha Arivalagan
Jan 01, 2024,06:47 PM IST

பாட்னா:  பீகாரில் ஒரு குளமே ஆட்டையைப் போடப்பட்ட சம்பவம் அதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வானிலை ஆய்வு நிலையம் சொல்லும் இல்லையா.. "கன மழை, மிக கன மழை, அதி கன மழை" என்று.. அதுபோல பீகாரில் நடந்து வரும் திருட்டுச் சம்பவங்களையும்.. "பரபரப்பு.. மிக பரபரப்பு.. அதி பரபரப்பு" என்று பிரித்து வைத்துக் கொள்ளலாம்.. அப்பத்தான் இந்த செய்தியை படிக்கவும் வசதியாக இருக்கும்.


போன வருஷம், ஒரு இரும்புப் பாலத்தை அப்படியே பெயர்த்து எடுத்துப் போய் விட்டார்கள் திருடர்கள்.. இதை பரபரப்பான சம்பவமாக பார்த்தோம். ஆனால் அதை மிஞ்சும் வகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ரயில் என்ஜினேயே ஆட்டையைப் போட்டார்கள்.. இதை மிக பரபரப்பான சம்பவமாக வகைப்படுத்தலாம்.. ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவம் இருக்கே.. அதை அதி பரபரப்பானதாக மட்டுமே பார்க்க முடியும்.. காரணம் ஒரு பெரிய "குளத்தையே" சுட்டு விட்டார்கள்!




பீகாரில் அடுத்தடுத்து நடந்து வரும்  இந்த பகீர் கொள்ளைச் சம்பவங்கள் அதிர வைப்பதாக உள்ளன. வினோதமான இந்த திருட்டுக்கள் இப்படி தொடர் கதையாகி வருவது அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


முன்பெல்லாம் வங்கியில் போய் கொள்ளை அடிப்பார்கள்.. கோவில் உண்டியலை உடைத்துத் திருடுவார்கள்.. வழிப்பறி செய்வார்கள்.. கீழே பத்து ரூபாயைப் போட்டு திசை திருப்பி விட்டு பல லட்சம் பணத்தை அபேஸ் செய்து தப்பி ஓடுவார்கள்.. இப்போது அப்படி இல்லை.. எல்லாமே லம்ப் லம்ப்பாகத்தான் செய்கிறார்கள்.


வினோதமான திருட்டுக்களில் பீகாரைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது முடிவே இல்லாமல் தொடர்வதுதான் ஆச்சரியமாக உள்ளது. 


தர்பங்கா மாவட்டத்தில் ஒரு குளம் இருந்தது. அந்தக் குளம் திடீரென மண் மூடிக் காணப்பட்டது. இங்க இருந்த குளத்தை எங்கடா காணோம் என்று கிராமத்து மக்கள் திடுக்கிட்டுப் போய் விட்டார்கள். குளத்துக்கு நடுவே ஒரே ஒரு குடிசை வீடு மட்டும் உள்ளது.  திடீரென குளம் மூடப்பட்டு குடிசை இருந்ததால் பலரும் குழப்பமடைந்தனர். போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது அந்த குடிசையப் போட்டவர்கள் தலைமறைவாகி விட்டனர்.


இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், இது மக்கள் பயன்படுத்தி வந்த குளம். இங்கு நாங்கள் மீன் பிடிப்போம். திடீரென குளத்தை ஒரு கும்பல் வந்து மண்ணைப் போட்டு மூடி ஒரு குடிசையையும் அதற்கு நடுவே போட்டதால் குழப்பமடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தோம் என்றனர்.


இந்த குளத்தில் மண்ணைப் போட்டு மூடும் வரை அதிகாரிகள் அப்படி வேறு என்ன "பெர்பார்மன்ஸ்" செய்து கொண்டிருந்தார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் குளத்தை மூடப் போகும் நிலையில் அதிகாரிகள் சுதாரித்துக் கொண்டு விரைந்து வந்து மூடும் வேலையை நிறுத்தியுள்ளனர். ஆனால் நிலத்தை ஆட்டையைப் போட்ட மாபியா அவர்களைப் பொருட்படுத்தவில்லை. போலீஸார் வந்த பிறகே அவர்கள் தலைமறைவாகி விட்டனர்.


இரவு நேரத்தில்தான் மண்ணைப் போட்டு மூடும் வேலையைச் செய்துள்ளது இந்த லேன்ட் மாபியா. கிட்டத்தட்ட 15 நாட்கள் ஆகியுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக மண்ணைப் போட்டு மூடி வந்துள்ளனர். 


சாமானிய மனிதர்களால் செய்ய முடியாத திருட்டுக்களை எல்லாம் பீகாரில் சிலர் செய்து வருகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு ஒரு டீசல் ரயிலின் என்ஜினையே மொத்தமாக திருடிச் சென்றனர். அதை பார்ட் பார்ட்டாகப் பிரித்து கொண்டு போய் விட்டனர். பகுசராய் ரயில்வே யார்டில்தான் இந்த சம்பவம் நடந்தது.


அதேபோல இந்த ஆண்டு தொடக்கத்தில், ரோத்தாஸ் மாவட்டத்தில் 60 அடி நீள இரும்புப் பாலத்தை அக்கு அக்காக பிரித்துக் கொண்டு போய் விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக அரசு அதிகாரி உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.  கேஸ் கட்டர், ஜேசிபி இயந்திரம் ஆகியவற்றைக் கொண்டு இந்த திருட்டு நடந்தது. இப்போது குளத்தையே மண்ணைப் போட்டு மூடி ஆட்டையைப் போட்டுள்ளனர். பீகார் அரசு ஏதாவது செய்தால் நல்லது.. இல்லாவிட்டால் இதை விட மிகப் பெரிய திருட்டைச் செய்து உலக நாடுகளையே பரபரப்பாக்கி விடுவார்கள் இந்த நூதனக் கொள்ளையர்கள்.


யார்ரா நீங்கல்லாம்!