லோக்சபா தேர்தல் முடிவை எதிர்த்து.. 3 முக்கிய தலைவர்கள் வழக்கு.. யார் யார் தெரியுமா?

Manjula Devi
Jul 18, 2024,04:59 PM IST

சென்னை:   விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றதை செல்லாது என்று அறிவிக்கக் கோரி,  தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வழக்கு தொடர்ந்துள்ளார். அதே போல் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நைனா நாகேந்திரனும்  வழக்குத் தொடர்ந்துள்ளனர்.


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல்  19ஆம் தேதி 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. இதனை அடுத்து ஜூலை 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் திமுக கூட்டணி புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அமோக வெற்றி பெற்றது. தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்குத் தொடர சட்டத்தில் இடம் உள்ளது. அதற்கு தேர்தல் முடிவுகள் வெளியாகி 45 நாட்களுக்குள் இந்த வழக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். அந்த வகையில் இன்றுடன் தேர்தல் வழக்கு தொடர கடைசி நாளாகும்.




இந்த நிலையில், இன்று விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி தொகுதி வேட்பாளர்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர் ஆகியோர் போட்டியிட்னர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் விஜய பிரபாகரனை விட 5000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.


ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிட்டார். அதே தொகுதியில் காங்கிரஸ் சார்பாக நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருவரும் இன்று  தத்தமது தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற நவாஸ் கனி வேட்புமனு தாக்கலின் போது சொத்துக்கணக்கை முறையாக காட்டவில்லை. அதனால் அவரது வெற்றி செல்லாது எனக் கூற வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார்.


அதேபோல, திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் நைனார் நாகேந்திரன், காங்கிரஸ் சார்பில்  சி. ராபர்ட் புரூஸ், அதிமுக சார்பில் ஜான்சி ராணியும் போட்டியிட்டனர். திருநெல்வேலி தொகுதியின் தேர்தல் முடிவை எதிர்த்து பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.