எம்.பி  பதவியைத் தொடர்ந்து.. ராகுல் காந்திக்கு மீண்டும் அதே வீடு கிடைத்தது!

Su.tha Arivalagan
Aug 08, 2023,03:53 PM IST

டெல்லி: எம்.பி பதவியை மீண்டும் பெற்றுள்ள ராகுல் காந்தி தற்போது தான் வசித்து வந்த அதே வீட்டைத் திரும்பப் பெற்றுள்ளார்.


கேரள மாநிலம் வயநாடு லோக்சபா தொகுதி உறுப்பினராக இருப்பவர் ராகுல் காந்தி. கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோடி என்ற பெயரை கூறி தெரிவித்த கருத்துக்காக அவருக்கு குஜராத் மாநிலம் சூரத் கோர்ட், 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இதைத் தொடர்ந்து உடனடியாக ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டது. வயநாடு தொகுதி காலியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.


இந்த நிலையில் சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் இந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடைவிதித்தது. மேலும்  ராகுல்காந்தியின் சிறைத் தண்டனையையும் கோர்ட் நிறுத்தி வைத்தது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்.பி பதவியை வகிக்கும் தகுதியைப் பெற்றார்.  லோக்சபா செயலகமும் ராகுல் காந்திக்கு மீண்டும் எம் பி பதவியை வழங்கியது.


முன்பு எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் வசித்து வந்த வீட்டைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டது. ராகுல் காந்தியும் உடனடியாக தனது வீட்டைக் காலி செய்து கொடுத்து விட்டார். தற்போது ராகுல் காந்திக்கு மீண்டும் எம்பி பதவி கிடைத்துள்ளதைத் தொடர்ந்து அவர் ஏற்கனவே வசித்து வந்த டெல்லி துக்ளக் லேன்  பங்களாவை மீண்டும் அவருக்கே ஒதுக்கியுள்ளனர்.