சபாஷ் சபாஷ்.. மெரினா கடற்கரையை போலவே.. பெசன்ட் நகரிலும்.. மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பாதை!

Manjula Devi
Aug 22, 2024,09:19 AM IST

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 1.62 கோடி செலவில் மரப்பலகை பாதை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது.


வெளிநாடுகளில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு வசதிகளை பொது வெளிகளில் செய்து வைத்திருப்பார்கள். அதெல்லாம் நம்ம நாட்டில் கனவாகவே இருந்து வருகிறது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களுக்கான சமூகமாக நாம் மாறி வருகிறோம். தாழ்தளப் பேருந்துகள் இன்னும் கூட நம்மிடம் அதிகம் இல்லை. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைப்படுத்தப்ப்பட்டு வருகிறது.


சென்னையில் மாற்றுத்திறனாளிக்கான பல்வேறு நலத்திட்ட பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதில் பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோ ரயில், பயணச்சீட்டு உள்ளிட்டவற்றில்  மாற்றுத்திறனாளிகளுக்காக பல சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.




இந்த நிலையில் தமிழ்நாட்டில் இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை மெரீனா கடற்கரையில், கரையிலிருந்து கடலுக்கு அருகே வரைக்கும் மாற்றுத் திறனாளிகள் எளிதாக செல்லும் வகையில் மரப் பாதை அமைக்கப்பட்டது. அது வெற்றியும் பெற்றது. இந்த நிலையில் தற்போது அது பெசன்ட் நகர் கடற்கரைக்கும் விரிவுபடுத்தப்படுகிறது. பெசன்ட் நகர் பீச்சில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் பொழுதுகளை கழித்து வருகின்றனர். ஆனால் மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகே போய் அமர்ந்து, மனதார மனம் குளிர அலைகளை ரசிப்பது ஒரு கனவாகவே இருந்து வருகிறது,  குறையாகவே இருந்து வருவதுடன் பெரும் சவாலாகவும் இருக்கிறது.


மாற்றுத்திறனாளிகளும் சக மனிதர்களைப் போலவே கடற்கரையில் வந்து தங்களின் பொழுதுகளை கழிப்பதற்காக சென்னை மாநகராட்சி சூப்பர் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் கடற்கரையில் செல்வதற்கு மரத்திலான நடைபாதை அமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்புதல் கோரி மாநகராட்சி,தமிழ்நாடு மாநில கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதற்கு ஆணையம் ஓகே சொல்லிவிட்டதாம்.


ஏற்கனவே சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மரப்பலகை பாதையை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது அதேபோல் பெசன்ட் நகரில் மரப்பலகை பாதை அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கி செயல்படுத்தி வருகிறது. இதற்காக ரூபாய் 1.61 கோடி செலவில் 190 மீட்டர் நீளத்தில் 2.8 மீட்டர் அகலத்தில் இப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த மரப்பலகை பாதை பணிகள் நான்கு மாதங்களில் முடிந்து விடும். இதன் பின்னர் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்