மன்னிப்பு கேட்ட மன்சூர் அலி கான்.. அடுத்து திரிஷாவிடம் வாக்குமூலம் பெற போலீஸ் முடிவு?

Meenakshi
Nov 25, 2023,05:28 PM IST

சென்னை: நடிகர் மன்சூர் அலி கானிடம் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அடுத்து நடிகை திரிஷாவிடம் வாக்குமூலம் பெற காவல்துறை முடிவு செய்துள்ளது.


லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கில் மன்சூர் அலிகானை நேரில் வரவழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரி அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து தவறு செய்வது மனித குணம்.. மன்னிப்பது தெய்வகுணம் என்று டிவீட் போட்டார் திரிஷா. இதன் மூலம் மன்சூர் அலிகானை அவர் மன்னித்து விட்டதாக பொருள் கொள்ளப்பட்டது.




இந்த நிலையில் மன்சூர்  அலிகான்  தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கு அடுத்து எந்த திசையில் போகப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக அடுத்து திரிஷாவிடம் விசாரணை நடத்தி அவரது கருத்தை காவல்துறை கேட்கும் என்று தெரிகிறது. அவர் நான் மன்சூர் அலிகானை மன்னித்து விட்டேன்.. இந்த வழக்கை தொடர விரும்பவில்லை என்று கூறினால் அதை ஏற்று வழக்கு வாபஸ் பெறப்பட வாய்ப்புள்ளது.


சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு பின் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கபடும் என தெரிகிறது.