சரத்பாபு நலமுடன் உள்ளார்.. வதந்திகளை நம்பாதீர்கள்.. குடும்பத்தினர் வேண்டுகோள்!

Su.tha Arivalagan
May 03, 2023,09:08 PM IST

ஹைதராபாத்: நடிகர் சரத்பாபு காலமானதாக வெளியான செய்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். அவர் குணமடைந்து வருவதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.


உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில்,உடல் உறுப்புகள் செயலிழந்த நிலையில் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மாலை அவர் குறித்த செய்திகள் காட்டுத் தீயாக பரவின. அவர் காலமாகி விட்டதாக அனைத்து முன்னணி செய்தி நிறுவனங்களும் செய்தி வெளியிட்டன.




இந்த நிலையில் இந்த செய்திகளை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.  இதுகுறித்து சரத்குமாரின் சகோதரி கூறியதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சரத்குமார் நலமுடன் உள்ளார். அவர் வேறு அறைக்குத்தான் மாற்றப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து செய்தியாளர்கள் முன்பு தோன்றுவார். அவர் குறித்த செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியதாக செய்திகள் கூறுகின்றன.


முன்னதாக சென்னையிலும் பின்னர் பெங்களூரிலுமாக சரத்பாபுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன் பின்னர் அவர் ஹைதராபாத்துக்கு மாற்றப்பட்டு அங்குள்ள ஏஐஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது பல உடல் உறுப்புகள் செயலிழந்த நிலைக்குப் போனதால் கவலைக்கிடமான நிலையில் இருந்து வருகிறார்சரத்பாபு.


சேருசத்யம் பாபு தீக்ஷிதலு என்ற இயற்பெயர் கொண்ட சரத் பாபுவுக்கு வயது 71 ஆகும். தெலுங்குத் திரையுலகில் ஏராளமான படங்களில் நடித்துள்ள சரத் பாபு தமிழிலும் மிகப் பெரியஅளவில் நடித்து மிக முக்கியமான நடிகராக வலம் வந்தவர். ரஜினிகாந்த், கமல்ஹாசனின் திரையுலக நண்பராக வலம் வந்த அவர் நிஜத்திலும் அவர்களுக்கு நல்ல நண்பராக திகழ்ந்தவர்.


1973ம் ஆண்டு ராமராஜ்ஜியம் என்ற தெலுங்குப் படத்தில் நடித்து அறிமுகமானார் சரத் பாபு. 220க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.  3 முறை ஆந்திர மாநில அரசின் சிறந்த துணை நடிகருக்கான நந்தி விருதைப் பெற்றுள்ளார்.


சலங்கை ஒலி, வேலைக்காரன், முத்து உள்ளிட்ட ஏராளமான படங்களில் சரத்பாபு நடித்துள்ளார்.