மணப்பாறை முறுக்கு பிழிஞ்சாச்சு.. அடுத்து.. திருச்சியில் பரோட்டா சுட்டு அசத்திய அண்ணாமலை!

Meenakshi
Nov 09, 2023,12:15 PM IST

திருச்சி:  மணப்பாறைக்குப் போனபோது முறுக்குப் பிழிந்து அசத்திய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சிக்கு வந்தபோது அங்கு பரோட்டா சுட்டு கலக்கி விட்டார்.


என் மண் என் மக்கள் யாத்திரையின் 2வது கட்டத்தில் மும்முரமாக உள்ளார் அண்ணாமலை.  போகும் ஊர்களில் எல்லாம் ஏதாவது ஒரு சுவாரஸ்யத்தை அரங்கேற்றி விடுகிறார். முன்பு ஒரு இடத்தில் மண் பாண்டம் செய்து மிரட்டினார். பிறகு டீக் கடையில் டீ போட்டார். ஒரு ஊரில் ஆட்டுக்குட்டிக்கு சிவகாமி என்று பெயர் வைத்தார். நிறைய குட்டி போடட்டும் என்றும் அவர் வாழ்த்தினார். கடைசியில் அது கிடா என்று தெரிய வந்து கலகலப்பானது.




இப்போது திருச்சி மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தில் உள்ளார் அண்ணாமலை. மணப்பாறைக்குப் போனபோது அங்கு ஒரு கடையில் முறுக்குப் பிழிந்து அசத்தினார். அவரது கை வேலையைப் பார்த்து அசந்து போன கடைக்காரர், இந்தாங்க முறுக்கு பார்சல்.. போய் நம்ம பிரதமர் மோடிக்குக் கொடுங்க என்று அவர் பங்குக்கு கலக்கினார். 


இந்த வரிசையில் தற்போது திருச்சிக்கு வந்த அண்ணாமலை அங்கு பரோட்டா சுட்டு வியக்க வைத்து விட்டார்.

திருச்சியில் 2 நாள் பயணத்தில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட துவாக்குடி வ.உ.சி நகரிலிருந்து அண்ணா வளைவு வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவரிடம் பாரத மஸ்தூர் சங்கத்தின் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.


மனுவை பெற்றுக்கொண்ட அண்ணாமலை அப்பகுதியில் இருந்த ஹோட்டல் ஒன்றில் பரோட்டா போடுவதை பார்த்து ஆஹா.. இன்னிக்கு நம்ம டார்கெட் பரோட்டா என்று முடிவெடுத்து கடைக்குள் நுழைந்தார். அண்ணே நானும் பரோட்டா போடறேன் என்று கடைக்காரரிடம் கேட்க, அவரோ ஆஹா.. அதுக்கென்ன தாராளமா போடுங்க என்று மகிழ.. பரோட்டா மாஸ்டரிடம் எப்படி போடணும்னு ஒரு குட்டி டெமோ காட்டச் சொல்லி கேட்டு விட்டு சூப்பராக பரோட்டா போட்டார் அண்ணாமலை.




அண்ணாமலை பரோட்டாவை லாவமாக போட்ட ஸ்டைலைப் பார்த்து கட்சியினர் ஹேப்பியாகி கை தட்டி உற்சாகமடைந்தனர்.. பாரத் மாதா கி ஜெய் கோஷமும் போட்டு குதூகலமடைந்தனர். முறுக்கு சுட்டாச்சு, பரோட்டா சுட்டாச்சு.. அடுத்து அண்ணாமலை என்ன செய்யப் போகிறார் என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.. அது அவர் போகும் ஊரைப் பொறுத்தது.. பொறுத்திருந்து பார்ப்போம்.