மக்களே உஷார்...தமிழகத்தில் கொரோனா வேகமெடுக்குது...மீண்டும் மாஸ்க் போடுங்க

Aadmika
Dec 15, 2023,06:22 PM IST

சென்னை : கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் வேகமெடுக்க துவங்கி உள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி தமிழக சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


உலக நாடுகள் பலவற்றிலும் மீண்டும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் மீண்டும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் படியும், மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்றும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு பொது மக்களை வலியுறுத்தி உள்ளது. 


இதற்கிடையில் இந்தியாவிலும் கொரானா பரவல் மீண்டும் வேகமெடுக்க துவங்கி உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அதிகபட்சமாக கேரளாவில் ஒரே நாளில் 200 க்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது வரை கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1000 ஐ தாண்டி உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் சபரிமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடி உள்ளது குறித்து மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.




கேரளாவைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. லேசான அளவில் பரவ துவங்கி உள்ளது என்றாலும் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 10 நாட்களுக்கு முன் தமிழகத்தில் தினசரி கொரோனா பரவல் 7,8 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில் தற்போது 40 ஆக அதிகரிக்க துவங்கி உள்ளது. டிசம்பர் முதல் வாரத்திற்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது.


தமிழகத்தின் பல பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பலவிதமான நோய்களும் பரவி வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவும் மீண்டும் பரவ துவங்கி உள்ளதால் மக்களிடையே அச்சம் ஏற்பட துவங்கி உள்ளது. ஆனால் மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.