காஸாவின் எதிர்காலம் என்ன.. போர் முடிந்ததும் யார் கைக்குப் போகும்?... சூழ்ந்து நிற்கும் குழப்பம்

Su.tha Arivalagan
Nov 12, 2023,09:45 AM IST

டெல் அவிவ்: காஸாவை கிட்டத்தட்ட சுடுகாடாக்கி விட்டது இஸ்ரேல். மூர்க்கத்தனமாக அது நடத்தி வரும் போரால் காஸாவே நிர்மூலமாகியுள்ளது. பல லட்சம் பேர் அகதிகளாக இடம் பெயர்ந்து விட்டனர். 10,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.


இப்போது அனைவரின் முன்பும் வியாபித்து நிற்கும் மிகப் பெரிய கேள்வியே.. காஸாவை முழுமையாக இஸ்ரேல் அபகரிக்குமா என்பதுதான். ஆனால் காஸாவைக் கைப்பற்றும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஹமாஸை ஒழிப்பது மட்டுமே எங்களது நோக்கம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நதன்யாகு கூறியுள்ளார்




இந்த நிலையில் காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் முடிவுக்கு வந்த பின்னர் அந்த பகுதியை யார் நிர்வாகம் செய்யப் போகிறார்கள் என்பது இன்னொரு குழப்பமாக எழுந்துள்ளது.


பாலஸ்தீனத்திற்கு உட்பட்ட பிரதேசம்தான் காஸா. ஆனால் கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்தப் பகுதியை நிர்வகித்து வந்தது ஹமாஸ் அமைப்புதான். பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் இது இல்லை. கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் இந்த பகுதியில் வசித்து வருகின்றனர்.


பாலஸ்தீன படையினருடன் சண்டையிட்டு காஸாவைக் கைப்பற்றிக் கொண்டது ஹமாஸ். அன்று முதல் அதுதான் ஆட்சி நடத்தி வந்தது. தற்போது இஸ்ரேல் போர் முடிந்ததும் காஸாவை கண்டிப்பாக இஸ்ரேல் எடுத்துக் கொள்ளாது. காரணம் தான் சீரழித்த பகுதியை தானே சீரமைக்கும் திட்டமெல்லாம் இஸ்ரேலிடம் இல்லேவே இல்லை. 


இந்த நிலையில் காஸாவை மீண்டும் பாலஸ்தீன அரசே கையகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா யோசனை தெரிவித்துள்ளது.  பல்வேறு உலகத் தலைவர்களும் கூட இதையே வலியுறுத்தி வருகின்றனர்.


தற்போது பாலஸ்தீன அரசின் வசம்,  இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரையின் சில பகுதிகளும் உள்ளன. போர் முடிந்ததும் காஸாவையும் அனேகமாக பாலஸ்தீனமே நிர்வகிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேசமயம், பாலஸ்தீனத்தின் பன்னெடுங்கால பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.. மேற்குக் கரை, கிழக்கு  ஜெருசேலம், காஸா முனை ஆகியவை முழுமையாக பாலஸ்தீனம் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே காஸாவை தாங்கள் எடுத்துக் கொள்வது குறித்து பரிசீலிக்க முடியும் என்று பாலஸ்தீன அதிபர் மக்மூது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.


கடந்த 1967ம் ஆண்டு பாலஸ்தீனத்தின் ஒருங்கிணைந்த பகுதியான காஸாவை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. அதன் பின்னர் 2005ம் ஆண்டுதான் அது அங்கிருந்து விலகியது. சட்டப்பூர்வமாக பார்த்தால் காஸா, பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாகவே தற்போது வரை இருக்கிறது. நிர்வாகத்தை மட்டுமே ஹமாஸ் பார்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.