சந்திரயான் 3.. ஆதித்யா எல் 1.. அடுத்து?.. சோம்நாத் சொன்ன சூப்பர் மேட்டர்!

Aadmika
Sep 01, 2023,05:13 PM IST
திருப்பதி : நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் 3 திட்டம் வெற்றி அடைந்து விட்டது. சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 நாளை அனுப்பப்பட உள்ளது. இந்தியாவின் அடுத்த திட்டம் என்ன என்பது பற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.

சந்திரயான் 3 திட்டம் விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன் சந்திரனின் ஆதிக்கம் அதிகம் நிறைந்த இடமான திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று இஸ்ரோ விஞ்ஞானிகள் வழிபட்டனர். பிறகு அந்த திட்டம் நிறைவடைந்ததும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் நேரடியாக கோவிலுக்கு சென்று விட்டு வந்தார். அடுத்ததாக ஆதித்யா எல் 1 மிஷன் நாளை சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட உள்ள நிலையில் இன்று திருப்பதி மாவட்டத்தில் உள்ள செங்காளம்மா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்ற சோம்நாத் அங்கு சுவாமி தரிசனம் செய்தார். 



\பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூரியனை ஆய்வு செய்வதற்கான இந்தியாவின் முதல் திட்டமான ஆதித்யா எல் 1 நாளை காலை 11.50 மணிக்கு  ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஏவப்பட உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் துவங்கி உள்ளது. ஆதித்யா எல் 1 செயற்கைகோள் நம்முடைய சூரியனை ஆய்வு செய்யும். அது எல் 1 மையத்தில் இருந்து அடுத்த 125 நாட்கள் தனது ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். இது மிக முக்கியமான திட்டமாகும்.

சந்திரயான் 4 திட்டம் செயல்படுத்துவது பற்றி இன்னும் நாங்கள் முடிவு செய்யவில்லை. விரைவில் அது பற்றி அறிவிக்கப்படும். ஆதித்யா எல் 1 திட்டத்திற்கு பிறகு எங்களின் அடுத்த திட்டம், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யானை விண்ணிற்கு அனுப்புவது தான். அது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் விண்ணிற்கு அனுப்பப்படும் என தெரிவித்துள்ளார்.