சென்னையில் நாளை பள்ளிகள் திறப்பு.. ஆனா ஒரு சிக்கல்.. கல்வித்துறை வெளியிட்ட தகவல்

Aadmika
Dec 10, 2023,05:48 PM IST

சென்னை : சென்னையில் நாளை (டிசம்பர் 11) பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக பள்ளி கல்வித்துறை, அதில் உள்ள சில சிக்கல்கள் குறித்த தகவலையும் வெளியிட்டுள்ளது.


தொடர் மழை, மிச்சாங் புயல், வெள்ளம் போன்றவற்றால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு கடந்த சில நாட்களாக தொடர்ந்து விடுமுறை அறிவிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னையில் மழை ஓய்ந்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் இருப்பதால் முழுமையாக பள்ளிகள் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.




இது தொடர்பாக தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 9 நாட்களுக்கு பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறக்கப்படும். அதே சமயம் 4 மாவட்டங்களிலும் 14 பள்ளிகள் மட்டும் திறக்க முடியாத நிலை உள்ளது. சென்னையில் 6 பள்ளிகள் திறக்க முடியாத நிலையில் உள்ளன. போரூர், ஐயப்பன் தாங்கல் போன்ற பகுதிகளில் சில பள்ளிகளில் தண்ணீர் இன்னும் வடியவில்லை. தண்ணீர் நிற்கும் பள்ளிகளை தவிர்த்து மற்ற பள்ளிகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதே போல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களிலும் எப்போது அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படும் என்பது குறித்து தமிழக முதல்வர் முடிவு செய்வார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அறையாண்டு தேர்வுகள் குறித்து இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பல பள்ளிகள் இன்னும் வெள்ளநீரில் மூழ்கி உள்ளன. பல பள்ளிகளில் புயல் காரணமாக மரங்கள் விழுந்தும், மின் விநியோகம் பாதிக்கப்பட்டும் உள்ளன. இந்த பள்ளிகளை சீராக்கும் பணிகள் நடந்து வருகின்றன.